க்ரியா ராமகிருஷ்ணனின் 'தற்காலத் தமிழ் அகராதி' அரிய கருவூலம்.. மு.க.ஸ்டாலின், தினகரன் இரங்கல்
சென்னை: க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி', தமிழ் கற்கும் அனைவர்க்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் க்ரியா ராமகிருஷ்ணன். மரணப்படுக்கையில் இருந்தபோதும் பதிப்பு பணியை தொடர்ந்து செய்தவர் அவர்.
இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி க்ரியா ராமகிருஷ்ணன் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்:
தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான 'க்ரியா' பதிப்பகம் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கொரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தீயாக நெஞ்சில் இறங்கி, தாங்க முடியாத அதிரச்சியையும் வேதனையையும் தருகிறது. திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி', தமிழ் கற்கும் அனைவர்க்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும்.
பதிப்புப் பணியை தவமாகவே மேற்கொண்டு, முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டவர். மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடு செய்ய இயலாத, 'க்ரியா' ராமகிருஷ்ணன் மறைவினால், துயர்ப்படும் குடும்பத்தினர் - உறவினர்கள் - நண்பர்கள் - தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவர்க்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.(1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 17, 2020
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ள வெளியிட்ட அறிக்கை: தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
நவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. திரு.ராமகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.