ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்ற சதியா? ரகசிய சந்திப்பா? டிடிவி தினகரன் விளக்கம்
சென்னை: அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் தாம் ரகசிய சந்திப்பு மேற்கொண்டதாக வெளியான செய்திகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டம் ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
அதிமுகவினர் கடந்த 23-ந் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டமானது, எம்.ஜி.ஆரின் கட்சி வரலாற்றில் ஒரு கருப்பு தினம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொதுக்குழு கூட்டங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த சரித்திர நிகழ்வாக இருக்கும். தீயசக்தி கருணாநிதி என கூறி தான் எம்.ஜி.ஆர். அரசியல் களம் கண்டார். அதே போல அவரை பின் தொடர்ந்து ஜெயலலிதாவும் அரசியல் களம் வந்தார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஆணவத்தில் அதிமுகவை முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால் அமமுக என்ற ஒரு கட்சி இருக்கிறது; இதில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டு பேசுகிறார். திமுகவுக்கு நாங்களே சாவுமணி அடிப்போம்.
அதிமுக இப்போது அயோக்கியர்களின் கூடாரம் ஆகிவிட்டது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் கொள்கைகளை முன்னிறுத்தி ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். அதன் பின்னர் அதிமுகவை மீட்டெடுப்போம். ஜெயலலிதாவின் இயக்கம் தவறானவர்களின் கைகளில் மாட்டிக் கொண்ட காரணத்தினால் தான் நாங்கள் இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை துவங்கினோம். அதோடு தற்போது இரட்டை இலை சின்னம், எம்.ஆர் ராதா கையிலும் வீரப்பா போன்ற வில்லன்களின் கையிலும் மாட்டி உள்ளது. அதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள்தான் மீட்டு எடுப்பார்கள்.
ஓபிஎஸ் பதவி பறிப்பு? டிஸ்மிஸ்? பரபரப்பான நிலையில் சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்!
ஓ.பன்னீர் செல்வத்தை ரகசியமாக சந்திக்க எனக்கு எந்தவித தேவை இல்லை. பல கோடி ரூபாய் செலவு செய்து பொதுக்குழுவை கூட்டியும் நீதிமன்றம் தலையிட்டதால் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்பதால் அவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர். தற்போது அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களை மூன்று கோடி, நான்கு கோடி, 5 கோடி என பணம் கொடுத்து வாங்கி பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் வேலை நடந்து வருகிறது. அதற்காக எடப்பாடி பழனிச்சாமி அசுர ஆட்டம் ஆடி வருகிறார். அதனால், அதிமுக இயக்கம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் நல்வாய்ப்பாக வாட்டர் பாட்டிலால் மட்டும்தான் தாக்கப்பட்டார்; அதிமுக கூட்டத்தில் இருப்பவர்கள் இதை விட ஆபத்தானவர்கள். ஆனால் மிக தைரியமாக அங்கு சென்று அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட ஓ.பி.எஸ்,வைத்தியலிங்கம்மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.பி.எல் ஏலம் போல கட்சி நிர்வாகிகளை பல கோடி கொடுத்து வாங்கினாலும் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டது. இரட்டை தலைமை பிரச்சினை காரணமாக திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தற்போது யாரும் பேசுவதே இல்லை/ அதனால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது காற்றில் பறக்க விட்டிருக்கிறார். பொதுக்குழுவில் கைமாறிய பணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கைப்பற்றியிருந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு திராவிடனும் தலைகுனியும் வகையில் எந்தவித தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் தான் உள்ளது. இவ்வாறு தினகரன் கூறினார்.