தேர்தல் 2021: '58 வயசுல எனக்கு என்னங்க ஆசை வரப்போகுது?' - 'விண்டேஜ்' டிடிவி கலகல
சென்னை: சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு கூட்டணி குறித்த கேள்விகளுக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வாக்காளர்களிடம் என்ன பேசுவது, என்ன பேசக் கூடாது, பிரச்சாரத்தின் போது எந்தெந்த வாக்காளர்களுடன் செல்பி எடுப்பது வரை சகல பணிகளின் தயாரிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, 'அமமுக வந்தால் வரவேற்போம்' என, மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
கூட்டணி பேச்சு
இந்த சூழலில் சசிகலாவை அவருடைய தி.நகர் இல்லத்தில் இன்று சந்தித்த தினகரன், பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில், அதிமுக - பாஜக அணியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, "திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே எங்களின் முதல் குறிக்கோள். எனவே, இதே ஒத்த எண்ணத்தில் உள்ள கட்சிகள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.
இணைய தயாரா?
'அப்படியெனில், திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியுடன் இணைய தயார் என்று எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கு, "அமமுக தலைமையை ஏற்றுக் கொண்டு யார் வந்தாலும், அவர்களுடன் கூட்டணி வைக்க தயார்". இந்த கட்சியுடன் கூட்டணி, அந்த கட்சியுடன் கூட்டணி என்று இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் பேசாத கட்சிகள் குறித்து எதுவும் சொல்ல முடியாது. செய்தியாளர்களாகிய உங்கள் ஆசைக்காக சொல்கிறேன், "யார் வந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயார்" என்று தெரிவித்தார்.
திருப்பி திருப்பி
அப்போது மீண்டும் குறுக்கிட்ட செய்தியாளர், 'எடப்பாடி பழனிசாமி துரோகி என்று முன்பு சொன்னீர்கள். இப்போது திமுகவை தோற்கடிக்க யார் வந்தாலும், எங்கள் தலைமையை ஏற்றால் கூட்டணி வைப்போம் என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், இ.பி.எஸ். உடன் பேச்சுவார்த்தைக்கு தயாரா?' என்று கேள்வி எழுப்ப, 'எங்க தலைமையை அதிமுக ஏற்காது என்பது தெரியும். நீங்கள் கேள்வி கேட்டீர்களே என்று உங்கள் ஆசைக்காக தான் அப்படி சொன்னேன்.. திருப்பித் திருப்பித் அதையே கேட்குறீங்களே' என்று டிடிவி பதிலளித்தார்.
சிரிப்பலை
அப்போதும் விடாத செய்தியாளர், 'அப்படியெனில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க உங்களுக்கு ஆசை இல்லை என்று எடுத்துக்கலாமா?' என்று கேட்க, சட்டென சிரித்த டிடிவி, '58 வயசுல எனக்கு என்னங்க ஆசை வரப் போகுது' என்று பதிலளிக்க, செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
மீண்டும் லைம்லைட்டில்
2019 மக்களவை தோல்வி, முக்கிய நிர்வாகிகள் தாவல், இ.பி.எஸ்-ஸின் அசைக்க முடியா ஆட்சி போன்றவற்றால் டிடிவி இரண்டு ஆண்டுகளாகவே சப்தமே இல்லாமல் இருந்தார். அதற்கு முன், செய்தியாளர்களிடம் பேசும் போது, தனது இயல்பான பதட்டப்படாத டோனில் பேசி, கேள்வி கேட்பவர்களையே மடக்குவதில் டிடிவி கில்லாடி எனலாம். அவ்வப்போது, காமெடி பன்ச்களையும் அள்ளி வீசுவதால், அவரது இன்டெர்வியூ களமே, கமர்ஷியலாக இருக்கும். தற்போது சட்டமன்ற தேர்தல், சசிகலா ரிலீஸ் போன்ற காரணங்களால், மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ள தினகரன், கொஞ்சமும் மாறாமல், மீண்டும் அதே விண்டேஜ் டிடிவியாக இருப்பதாக செய்தியாளர்கள் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது.