அமமுக கட்சி "முதல்வர் வேட்பாளர்" டிடிவி தினகரன்.. நிறைவேறிய அதிரடி தீர்மானம்.. அமைகிறதா 3வது அணி?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பிற நிர்வாகிகள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
சசிகலா விருப்பம்
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா சென்னை வீடு திரும்பிய நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஒருங்கிணைந்து பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்மூலம், அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கு சசிகலா விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதிமுக தரப்பிலிருந்து, சசிகலாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று பல தலைவர்களும் தெரிவித்துவிட்டனர்.
மூன்றாவது அணி
இந்தநிலையில்தான், இன்னொரு பக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மூலமாக மூன்றாவது அணி அமைக்க முயற்சிகள் நடக்கின்றன.
சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொண்டால் அந்தப் பக்கமாக போவது, அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூலமாக கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது அரசியல் வியூகமாக இருக்கிறது.
அமமுக பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில்தான் சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, சசிகலா நல்லாசியுடன் டிடிவி தினகரனை முதல்வராக அயராது பாடுபட வேண்டும் என்று அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் அமையப்போகிறது, தினகரன்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது. அப்படியானால் சீமானை முதல்வர் வேட்பாளர் கொண்ட, நாம் தமிழர் எப்படி இந்த கூட்டணியில் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினகரனுக்கு பாராட்டு
மற்றொரு தீர்மானத்தில், எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கழகத்தை சிறப்பாக நடத்திவரும் டிடிவி தினகரனுக்கு பாராட்டை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
குக்கர் சின்னம்
டிடிவி டிடிவி தினகரன் தலைமையில் அம்மாவின் உண்மை தொண்டனாக பயணிப்பது என்று ஒரு தீர்மானம் கூறுகிறது. கழகம் காக்கும் போராளியாக, துணிச்சலுடன் எதிர்கொண்டு மக்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் டிடிவி தினகரன் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்தை பெற்று, அத்தனை சவால்களையும் எதிர்கொள்ள டிடிவி தினகரன் தயாராக இருப்பதாகவும் இந்த கூட்டம் புகழ்ந்துரைத்துள்ளது.