ஜெயக்குமார் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தி தரம் தாழ்ந்துவிட்டதே.. டிடிவி தினகரன் கிண்டல்
சென்னை: சசிகலா பற்றி விமர்சனம் செய்த துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் சமீபத்தில் பேசிய குருமூர்த்தி, வீடு தீப்பற்றி எரியும்போது சாக்கடை தண்ணீரை கொண்டும் அணைக்க வேண்டி வரும் என்று ஒரு உதாரணத்தைச் சொன்னார். சசிகலா பற்றி குருமூர்த்தி பேசி, அவரை அதிமுகவில் இணைக்க சிபாரிசு செய்கிறார் என்று கருத்துக்கள் எழத் தொடங்கின.
இந்த நிலையில் நேற்று டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்த குருமூர்த்தி, மன்னார்குடி மாபியா பற்றிய தனது எண்ணத்தில் மாற்றமில்லை. அவர்களுக்கு நான் ஆதரவு தரவில்லை என்றார்.
|
அதிமேதாவி
இந்த நிலையில், டிடிவி தினகரன் டுவிட்டரில் இன்று கூறியுள்ளதாவது: ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
|
சோ பெயருக்கு களங்கம்
அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.
|
கங்கை நீர்
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.
|
ஜெயக்குமார் விமர்சனம்
துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.