டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவுடன் தினகரன் மந்திராலோசனை
சென்னை: டெல்லியில் மேலிடங்களுடன் தாம் நடத்திய ரகசிய சந்திப்புகளில் என்னதான் சொல்லப்பட்டது என்கிற விவரங்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விவரிக்க இருக்கிறார் தினகரன். கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் சசிகலாவை முதல் முறையாக சந்திக்கிறார் தினகரன்.
கொரோனா லாக்டவுன் காலத்துக்கு முன்னர் இருந்தே மத்திய பாஜக அரசை பட்டும் படாமலும்தான் விமர்சித்து வந்தார் தினகரன். அத்துடன் மக்களுடனான அரசியல் என்கிற போக்கையையே கொரோனா காலத்தில் தினகரன் தவிர்த்தும் விட்டார்.
சிறையில் உள்ள சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவாரா உண்மை என்ன?
புதுவை சந்திப்புகள்
புதுச்சேரி பண்ணை வீடுதான் கதி என கிடந்த தினகரன், திடீரென சில அரசியல் சந்திப்புகளை மேற்கொண்ட போதே பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்த நிலையில்தான் தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற தினகரன் மேலிடத் தலைவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்.
டெல்லி பயணம் ஏன்?
இதுபற்றி அமமுக வட்டாரங்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு குறித்து வழக்கறிஞர்கள் அழைத்ததன் பேரில் டெல்லி சென்றிருந்தார் தினகரன். பின்னர் சசிகலா முன்கூட்டியே விடுதலை தொடர்பாக சில தலைவர்களையும் சந்தித்து பேசினார்; சிலரிடம் தொலைபேசியிலும் பேசினார் என்கின்றனர்.
டெல்லியில் நடந்தது என்ன?
சசிகலாவைப் பொறுத்தவரையில் எப்படியும் ஆட்சி அதிகாரத்தை பெறாமல் ஓயமாட்டார். இதற்காகவே பெங்களூரு சிறைவாசத்தையும் எதிர்கொண்டிருக்கிறார் சசிகலா. அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனையும் பெறுவதற்கும் தயங்காதவர்கள் சசிகலா தரப்பு. டெல்லி சந்திப்புகளிலும் தினகரன் இதனைத்தான் வெளிப்படுத்தினாராம்.
சசிகலாவை சந்திக்கும் தினகரன்
இதனிடையே டெல்லியில் நடந்த சந்திப்புகளில் என்னதான் பேசப்பட்டது? டெல்லி விதிக்கும் நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து சசிகலாவை சந்தித்து விரிவாக விளக்க இருக்கிறார் தினகரன். 6 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் சசிகலாவை சந்திக்கப் போகிறார் தினகரன். ஏற்கனவே தினகரன் மீது சில விஷயங்களில் சசிகலாவுக்கு அதிருப்தி இருந்தாலும் அவரை முழுமையாகவும் நம்புகிறார்.
அதிமுகவில் விவாதம்
சசிகலா முன்கூட்டியே விடுதலையாவாரா? இல்லையா? என்பது உறுதியாகவில்லை. ஆனால் ஜனவரி மாதம் நிச்சயம் சசிகலா விடுதலை ஆகிறார். அதனால் இனிவரும் நாட்கள் சசிகலா -தினகரன் தரப்புகளை முன்வைத்து தீயாக விவாதங்கள் அனல்பறக்கும்; அதிமுகவின் ஒவ்வொரு முகாமும் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விடாது ஆலோசனைகளை தொடங்கியும் உள்ளன.