ஆர்.கே.நகருக்கு முழுக்கு.. 'பக்காவான' தொகுதிக்கு டிடிவி தினகரன் ஸ்கெட்ச்.. பரபரக்கும் களம்!
சென்னை: வரும், சட்டசபை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளாராம்.
Recommended Video
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்கே நகரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் குக்கர் சின்னத்தில் அமோக வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன்.
இந்த தேர்தலில் ஆளும் அதிமுக இரண்டாவது இடத்திற்கு பிடிக்க முடிந்தது திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார் ஆனால் அப்படி வெற்றி பெற்ற ஆர் கே நகர் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட தினகரன் தயக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் திட்டம்
சட்டசபை தேர்தலில், அதிமுகவில் சசிகலா இருந்தால், தினகரன் அதிமுக சார்பில்தான் போட்டியிடுவார். ஒருவேளை, அப்படி நடக்காவிட்டால் அமமுக சார்பில் களமிறங்குவார் என்கிறார்கள். ஆனால், எந்த கட்சி சார்பில் களமிறங்கினாலும், ஆர்கே நகரிலிருந்து போட்டியிடப்போவதில்லை என்கிறார்கள். வேறு எந்த தொகுதியிலிருந்து அவர் போட்டியிடுவார் என்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
குக்கர் சின்னம்
இந்த முறையும் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதால் அமமுக தொண்டர்கள் குஷியாக உள்ளனர். அதே குஷியோடு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில், டிடிவி தினகரன் போட்டியிட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு பார்க்கும் வேலை
இந்தத் தொகுதியை டிடிவி தினகரன் ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டாராம். அக்கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாகவும், தினகரன் தங்குவதற்கும் கட்சி அலுவலகம் செயல்படுவதற்கும் வீடு பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தினகரனுக்கு நெருக்கமானவர்கள் காதும் காதும் வைத்தது மாதிரி இந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தினகரன் செல்வாக்கு
உசிலம்பட்டி தொகுதியை பொறுத்தவரை சமூக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் தினகரனுக்கு செல்வாக்கு உள்ளது. 1999ம் ஆண்டு, பெரியகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தினகரன். எனவே அங்கு அவருக்கென்று ஒரு ஓட்டு வங்கி உள்ளது.
பாதுகாப்பான தொகுதி
உசிலம்பட்டி தொகுதியில் கடந்த முறை அதிமுகதான் வென்றது. இந்த தொகுதி உருவானது முதல் பார்வர்டு பிளாக் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. ஆனால் இங்கு ஒரே ஒருமுறைதான் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதி தனக்கு மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கிறார் டிடிவி தினகரன் என்கிறார்கள்.