தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேகமாகும் கொரோனா.. கடவுள் மீது பழிபோட்டு தப்பிப்பதா.. டிடிவி தினகரன்
சென்னை: சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பால்
கையாலாகாதனத்தை மறைக்க கடவுள் மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள்? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளரும் ஆர் கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறுகையில் சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களிலும் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், கடவுளின் மீது பழியைப் போட்டுவிட்டு தமிழக ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பது நியாயமல்ல.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா நோய் தாக்குதல் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது.
எதை பத்தியும் கவலையே இல்லை.. சரக்குடன் பார்ட்டி.. திருவள்ளூர் திமுக தந்த ஷாக்... 50 பேருக்கு தொற்று
முதல்வர்
திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வரும் நிலையில், வெளிமாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவு என்று கூறியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் என்று தெரியவில்லை.
வாகன சோதனை
இ-பாஸ், வாகன சோதனை, தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்வதாக ஆட்சியாளர்கள் தெரிவித்துவரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை இப்படி அதிகரித்து வருகிறது. ஆனால், இதுபற்றிய கவலை ஆளுவோருக்கு இல்லை என்பதற்கு முதலமைச்சரின் அலட்சியமான பேட்டியே உதாரணம்.
டெண்டர்கள்
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு டெண்டர்களை விடுவதில் பழனிசாமி அரசு காட்டும் ஆர்வத்திலும் அக்கறையிலும் கொஞ்சமாவது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காட்டியிருந்தால் நிலைமை இந்தளவுக்கு மோசமாகி இருக்காது. தங்களின் திறமை இன்மையால் நாளுக்கு நாள் சூழல் மோசமாகி வருவதை மறைப்பதற்குத்தான் முதலமைச்சர் தற்போது கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார்.
பழனிச்சாமி
‘ஒரே ஒருவர் கூட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள்' என்று சட்டப்பேரவையில் ஆவேசமாக வசனம் பேசியபோது முதலமைச்சருக்கு கடவுள் நினைவுக்கு வரவில்லையா? ‘மூன்றே நாட்களில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படும்' என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்துச் சொன்னபோது, தான் ஒரு டாக்டர் இல்லை என்பது முதலமைச்சர் பழனிசாமிக்குத் தெரியாதா? ‘யார் சொல்வதையும் கேட்க மாட்டேன்; அனைத்தையும் நான் அறிவேன்' என எல்லோரையும் எடுத்தெறிந்து பேசிய போதெல்லாம், தான் ஒரு 'உலக மகா மருத்துவ நிபுணர்' என்று முதலமைச்சர் நினைத்துக் கொண்டிருந்தாரா?
எதிர்க்கட்சியினர்
இவ்வளவு நாட்களாக எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், சமூகஆர்வலர்கள் ஆகியோர் சொன்ன கருத்துகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இப்போது கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி, பலி எண்ணிக்கை 757 ஆக உயர்ந்து, நாள்தோறும் உயிரிழப்போரின் அளவு அதிகரித்துக்கொண்டே வரும் நேரத்தில், மொத்தப் பழியையும் கடவுளின் மீது போட்டுவிட்டு தப்பிக்க நினைத்தால் மக்கள் மட்டுமல்ல; கடவுளும் இவர்களை மன்னிக்க மாட்டார் என காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.