வேகம் காட்டும் டிடிவி தினகரன்.. அமமுகவின் டாப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.. ஏன்?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய மாற்றங்களை செய்து அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. அதிமுகவில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும்.
நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம்
அமமுக
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அமமுகவிலும் பொதுக்குழு நடக்க உள்ளது. அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அதே வானகரத்தில் நடக்க உள்ளது. அமமுக துணை தலைவர் எஸ் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழ் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது.
பொதுக்குழு
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய மாற்றங்களை செய்து அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராகவும், கழக தலைமை நிலையச் செயலாளராகவும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அமமுக துணைப் பொதுச்செயலாளராக C.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகிகள் மாற்றம்
கழக தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் சண்முகவேலு, முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எஸ்.கே செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போக அமமுகவில் இதுவரை, கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த C.சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்த வீரபாண்டி S.K.செல்வம் அவரவர் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
பொறுப்பு மாற்றம்
ஏற்கனவே கழக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலுள்ள M.ரெங்கசாமி மற்றும் G.செந்தமிழன் ஆகியோர் தொடர்ந்து அந்த பொறுப்பில் தொடர்வார்கள். அதேபோல் ஏற்கனவே கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலுள்ள S.V.S.P. மாணிக்கராஜா தொடர்ந்து அந்த பொறுப்பில் நீடிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுக்குழுவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.