பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்!
சென்னை: சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை தமிழக அரசு மாற்றி இருப்பதற்கு டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கி.மீ. நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் கூட பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் கூறியுள்ள அவர், 'சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் உணர்வோடு விளையாடும் இந்த வேலையை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக இந்த உத்தரவினை திரும்பப் பெற்று 'ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை' என்ற பெயரே தொடர்ந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.