"பழனிசாமி அரசு".. அதிகார மமதையால் மக்களுக்கு எதிராக செயல்படாதீங்க.. நிறுத்திக்கங்க.. தினகரன் அதிரடி!
எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார் டிடிவி தினகரன்
சென்னை: "அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும்" என்று டிடிவி தினகரன் அரசுக்கு எதிரான தன் கருத்தை சொல்லி நிலவி வந்த 3 நாள் மவுனத்தையும் உடைத்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 20 நாளைக்கு முன்பு டெல்லிக்கு செல்ல ஃபிளைட் ஏறும்போதே அரசியல் பரபரப்பு தமிழகத்தை சூழ்ந்து கொண்டது.. பாஜக தலைவர்களை தினகரன் சந்தித்து பேசினார் என்ற தகவல் கசிந்ததுமே ஓபிஎஸ் தரப்பு டென்ஷன் ஆகிவிட்டது.
அப்போதுதான், முதல்வர் வேட்பாளர் விவகாரத்தையும், வழிகாட்டு குழு கண்டிப்பாக வேண்டும் என்ற பிடிவாதத்தையும் முன்வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்.. அதனால் கடந்த வாரம் முழுவதும் அதிமுக கூடாரம் வெலவெலத்து பரபரப்புடன் காணப்பட்டதற்கு அடிப்படை காரணமே தினகரன் பாஜகவினருடன் நடத்திய சந்திப்பு என்றும் சொல்லப்பட்டது.
ஆமா, எல். முருகன் எதற்காக விழுந்தடித்து கொண்டு போய் முதல்வரை சந்திக்கணும்?
அமைதி
முதல்வர் வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்தபோதும் சரி, வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டும் சரி, தினரகன் எந்த கருத்தையும் சொல்லவில்லை.. இவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? என்ற சந்தேகம் சில அமமுகவினருக்கே எழவே செய்தது.. இந்நிலையில், எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக அரசை விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.
பதிவு
கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கான 2,650 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஹைகோர்ட் ரத்து செய்து இருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ள தினகரன் மாநில அரசு குறித்தும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து இதுதான்:
ஊராட்சி மன்றங்கள்
"கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
எடப்பாடி அரசு
கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே ஆளாகியிருக்கிறது பழனிசாமி அரசு... குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கருத்து மோதல்
அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அமமுக - அதிமுகவுக்கான நேரடி கருத்து மோதல் இனிவரும் கலங்களில் அதிகமாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.