ஜூன் 30-ஆம் தேதி சென்னைக்கு வாங்க! அமமுக நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு! முக்கிய முடிவு?
சென்னை: ஜூன் 30-ஆம் தேதி அமமுக நிர்வாகிகளை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் டிடிவி தினகரன்.
அதிமுக தலைமையில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் டிடிவி தினகரன் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பது அரசியல் களத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஜூன் 27 இல் வெளியாகிறது தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்!
அதிமுகவில் ஏற்கனவே பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் டிடிவி தினகரன்.
ஜூன் 30-ஆம் தேதி
அதிமுகவில் ஏற்படுள்ள அமளிதுமளியால் தமிழக அரசியல் களமே பரபரப்பாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே நடைபெற்று வரும் அதிகாரச் சண்டையை பற்றித் தான் பேச்சு. இந்தச் சூழலில் ஜூன் 30-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநில மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் டிடிவி தினகரன்.
புரட்சிப் பயணம்
அமமுகவை தொடங்கி தனிக்கட்சி நடத்தி வந்தாலும் கூட, அதிமுகவை மீட்பதே தங்களுடைய இலக்கு என பல தருணங்களில் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். இந்தச் சூழலில் இவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் தரப்பும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே சசிகலா புரட்சிப் பயணம் செல்லவிருப்பதாக அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
முக்கிய முடிவு
அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் விரிவான ஆலோசனை நடத்தி அன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள தலைமை குழப்பம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் பேசகூடும் எனத் தெரிகிறது. இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலோசனைக் கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்திருப்பதால் அதில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார்கள் அமமுக நிர்வாகிகள்.
ஓபிஎஸ் நண்பர்
ஓ.பன்னீர்செல்வத்தை நண்பர் என அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் தினகரன். அந்த நண்பர் நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இந்த தருணத்தில், ஆலோசனைக் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு, சுற்றுப்பயணம் என மீண்டும் பரபரப்பாக கள அரசியலில் இறங்கியிருக்கிறார் தினகரன்.