செம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன?
தினகரனை சிறையில் உள்ள சசிகலா சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறையில் அவரை சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சந்தேகத்தையும், பரபரப்பையும் எழுப்பி உள்ளது.
என்ன ஆனாலும் அதிமுகவை விட்டுவிடக்கூடாது என்பதுதான் சசிகலாவின் இறுதிவரையான குறிக்கோளாக இருந்தது. ஆனால் அமமுக என்ற புது கட்சியை ஆரம்பித்தது... தினகரனின் நடவடிக்கை, யாரையும் அரவணைத்து செல்லும் பாங்கு இல்லாதது, கட்சி நிர்வாகிகளின் யார் பேச்சையும் காது கொடுத்து கேளாதது போன்றவையே அவரது சறுக்கல்களுக்கும் காரணமாகி விட்டது.
இதனால் சசிகலா தினகரன் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் தேர்தல் ரிசல்ட்டும் பாதகமாக வந்துவிடவும், சசிகலாவின் கோபம் உக்கிரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்
சொத்து விவகாரம்
இதனிடையே, விவேக், அனுராதா, திவாகரன் போன்ற குடும்ப நபர்கள், சொத்து விவகாரம் முதல் அரசியல் விவகாரம்வரை புகார்களை சசிகலாவிடம் கொண்டு செல்லவும், தினகரனுடனான நெருக்கம் குறைய தொடங்கிவிட்டதாக தகவல்கள் கசிந்தன.
மறுப்பு
இந்நிலையில்தான், சசிகலாவை இன்று பகல் 12 மணிக்கு சிறையில் சென்று சந்திப்பதாக தினகரன் பிளான் போட்டிருந்தார். அதன்படி, பெங்களூர் சிறை முன்பும் காத்திருந்தார். ஆனால் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சசிகலாவை சிறையில் சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன்.
நீண்ட இடைவெளி
2017, ஏப்ரல் மாதமும் இப்படிதான் நடந்தது. இரட்டை இலையை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் செல்வாக்குமிக்கவர் என்று கூறப்படும் இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் சிக்கிய சமயம் அது. அந்த நேரத்தில் சிறையில் சசிகலாவை பார்க்க தினகரன் சென்றபோதும், சசிகலா அவரை பார்க்காமலேயே திருப்பி அனுப்பினார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், தினகரனை திருப்பி அனுப்பி உள்ளார்.
உறவில் விரிசல்?
சிறைதரப்பில் தினகரனை திருப்பி அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்காது. ஒருவேளை சசிகலாவே தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பியிருப்பாரோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், பெங்களூர் வரை சென்று, சசிகலாவை பார்க்காமலேயே தினகரன் திரும்பி உள்ளது அமமுகவுக்கு பெரிய சறுக்கலை தந்துள்ளதுடன், தினகரன் - சசிகலா உறவிலும் விரிசலை அதிகப்படுத்தி உள்ளதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.