கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினார்.. அமமுகவிலிருந்து வி.பி. கலைராஜன் நீக்கம்.. தினகரன் நடவடிக்கை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான வி.பி. கலைராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி. கலைராஜன். இவர் கட்சியில் அதிக ''வாய்ஸ்'' உள்ள நபர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இந்த நிலையில் இவர் திடீர் என்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வி.பி. கலைராஜனை நீக்குவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நேற்று இரவு இதற்கான அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அவர் கட்சியின் மாண்பிற்கு களங்கம் விளைவித்துவிட்டார். கட்சியை பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் இனி தொடர்பு கொள்ள கூடாது, என்று டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
விபி கலைராஜன் வகித்து வந்த பொறுப்புக்கு வி. சுகுமார் பாபு நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விபி கலைராஜன் திமுகவில் இணைவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்தது, இதையடுத்துதான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள்.