தனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு...! தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இல்லாத வி.எம்.எஸ்.முகமது முஸ்தபாவுக்கு தினகரன் செய்தித்தொடர்பாளர் பதவி அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை வலுவாக இருந்த அமமுகவின் உட்கட்டமைப்பு தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்டம் காணத்தொடங்கியது. முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக தினகரன் அணியில் இருந்து கழன்று அதிமுக, திமுக என இணைந்துகொண்டனர். இதனால் அமமுகவில் பல பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படாமலேயே காலியாக இருந்தது.
இந்நிலையில் தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். மேலும், அண்மையில் நடிகர் செந்திலுக்கு கூட அமமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கினார். இதனிடையே இன்று தனது கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் தினகரன். அதில், தனிக்கட்சி நடத்தி வரும் ஒருவரையும் தனது கட்சி செய்தித் தொடர்பாளராக நியமித்திருக்கிறார்.
தமிழ்நாடு முஸ்லீம் லீக் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருபவர் வி.எம்.எஸ்.முஸ்தபா. இதுவரை அமமுக ஆதரவாளர் என்ற முகவரியில் ஊடக விவாதங்களில் அவர் கலந்துகொண்டு வருகிறார். இப்படி அவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை கொண்டு இயங்கும் முஸ்தபாவை தனது கட்சி செய்தித்தொடர்பாளர்கள் பட்டியலில் இணைத்துவிட்டார் தினகரன். இது அமமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்
மேலும், அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் திமுகவுக்கு சென்றதால் நடேசன் என்பவரை பொறுப்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.