தகுதிநீக்க எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து பரிகாரம் தேடி கொள்ளும் தினகரன்
சென்னை: தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கு 9 தொகுதிகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் தினகரன்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 18 சட்டசபை தேர்தலுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமமுக சார்பில் 38 லோக்சபா தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன். அது போல் 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கு 9 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
Also Read | 24 வேட்பாளர்கள் ரெடி.. அமமுக லோக்சபா முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. டிடிவி தினகரன் வெளியிட்டார்!
வேட்பாளர்கள் யார்
அந்த 9 வேட்பாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களாவர். பூந்தமல்லி- ஏழுமலை, பெரம்பூர்- வெற்றிவேல், திருப்போரூர்- கோதண்டபாணி, குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர்- பாலசுப்பிரமணி, அரூர்- முருகன், மானாமதுரை- மாரியப்பன் கென்னடி, சாத்தூர்- சுப்பிரமணியன், பரமக்குடி - டாக்டர் முத்தையா ஆகியோர் ஆவார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர்
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து கட்சி கொறடா உத்தரவை மீறியதாக 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
கிண்டல்
நீதிமன்றம் சென்றும் சபாநாயகர் உத்தரவு சரி என்றே தீர்ப்பு வெளியானது. இதையடுத்து 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரனை நம்பி சென்றதால் பதவியை இழந்து விட்டார்கள் என அந்த 18 பேர் குறித்து கிண்டலுடன் வேதனை தெரிவித்தனர் அதிமுக.
பிராயசித்தம்
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேரை அறிவித்து தினகரன் தன் மீதான அவச்சொல்லுக்கு பிராயசித்தம் தேடிக் கொண்டு விட்டதாகவே கருதப்படுகிறது.