3வது முறையாக ஏமாறும் சசிகலா.. இன்னும் ஒரு ஷாக் காத்து இருக்கிறது.. தினகரனுடன் 2 நாளில் மீட்டிங்!
லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது உறவினர் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்திக்க இருக்கிறார்.
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது உறவினர் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்திக்க இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் அமமுக பெரிய அளவில் களமிறங்கி தடம் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமமுக நினைத்தது எதுவும் நடக்கவில்லை.
பல இடங்களில் அமமுக மிக மோசமாக தோல்வியை தழுவியதுதான் மிச்சம். ஆர்கே நகர் வெற்றிக்கு பின் தினகரனுக்கு நிகழ்ந்தது எல்லாமே ஃபிளாப் ஷோதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா துரோகம்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் வரிசையாக மூன்று முறை மிகப்பெரிய துரோகங்களை சசிகலா சந்தித்துவிட்டார். கூடவே இருந்த ஓ.பன்னீர்செல்வம் அணி மாறியது. அதன்பின் எடப்பாடி பழனிச்சாமியும் அணி மாறியது என்று வரிசையாக இரண்டு துரோகங்களை சந்தித்தவர்தான் சசிகலா.
மூன்றாவது அதிர்ச்சி
சசிகலாவிற்கு மூன்றாவது அதிர்ச்சி அளித்த விஷயம்தான் அமமுகவின் பொதுச்செயலாளர் பதவி. அமமுகவின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. தினகரன்தான் தற்போது அந்த பதவியை வகித்து வருகிறது. இந்த மாற்றத்திற்கு சசிகலா அப்போதில் இருந்தே ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்.
இருவரும் சந்திப்பு
இந்த நிலையில்தான் தற்போது சசிகலாவும், டிடிவி தினகரனும் சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். வரும் 28ம் தேதி தினகரன் சசிகலாவை பரபரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திக்க இருக்கிறார். தேர்தல் தோல்விக்கு பின் இவர்கள் சந்திக்க போகும் முதல் மீட்டிங் இது. இதில்தான் சசிகலாவிற்கு அந்த நான்காவது அதிர்ச்சி காத்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
என்ன அதிர்ச்சி
அதன்படி சசிகலா இந்த வருட இறுதியில் நன்னடத்தை அடிப்படையில் வெளியே வருவார் என்று செய்திகள் வந்தது. ஆனால் அதிமுக தரப்பு மத்திய அரசு அழுத்தம் மூலம் அதற்கும் தடை போட்டு இருக்கிறது. நன்னடத்தை சான்றை சசிகலாவிற்கு அளிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இதனால் டிடிவி தினகரன் தயவு அதிமுகவிற்கு தேவை இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சசிகலாவிற்கு விடுதலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 1.5 வருடமும் முழுதாக சசிகலா சிறையில் இருந்தாக வேண்டும் என்று கூறுகிறார்கள். இதைத்தான் தினகரன் சசிகலாவிடம் பேச போகிறார் என்று தெரிகிறது.