அமமுகவுக்கு ஹை டெக் தலைமை அலுவலகம்... வரும் 12-ம் தேதி திறப்பு விழா
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா வரும் 12-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
சென்னை அசோக் நகரில் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த அமமுக அலுவலகம், வியாழக்கிழமை முதல் ராயப்பேட்டைக்கு இடம்பெயர்கிறது.
புதிய அலுவலக திறப்பு விழாவில் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தனிக்கட்சி
அதிமுகவிலிருந்து தினகரன் நீக்கப்பட்டு தனிமரமாக விடப்பட்ட போது, தனிமரமான தன்னை சுற்றி அவர் ஒரு தோப்பை உருவாக்கி கொண்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி சட்டமன்ற இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் என போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறார். மேலும், அதிமுகவுக்கு மாற்று அமமுக தான் என்ற நிலையை உருவாக்க கடந்த 3 ஆண்டுகளாக தினகரன் போராடி வருகிறார்.
கட்சித் தாவல்
தொடக்கத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, சென்னை அசோக் நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் அமமுக தலைமை அலுவலகம் அமைத்துக்கொள்ள உதவினார். ஒரு கட்டத்தில் தனது ஒப்பந்தப் பணிகள் ஆட்டம் கண்டதால் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார் இசக்கி சுப்பையா. இதனால் அவரது இடத்தில் இயங்கி வந்த அமமுக அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு தினகரனுக்கு ஏற்பட்டது. இதற்காக புதிய இடங்களை தேடிய டிடிவி இறுதியாக ராயப்பேட்டையை டிக் அடித்தார்.
நவீன வசதிகள்
இந்நிலையில் ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகம் ஹை டெக் முறையில் உள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகளை தொடர்பு கொள்ளும் வகையில் பேக்ஸ், இணையம், தொலைபேசி, நிர்வாகிகளுக்கு தொலைக்காட்சிகளுடன் கூடிய அறை, ஓய்வறை உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களின் படங்கள் அலுவலகத்தின் முகப்பில் உள்ளன.
சட்டமன்ற தேர்தல்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அலுவலகம் அவசியம் எனக் கருதினார் தினகரன். இதன் காரணமாக விரைவாக புதிய அலுவலகத்தை அமைத்து பணிகளை தொடங்க உள்ளார். வெளியூர் சுற்றுப்பயணத்தை தவிர்த்து சென்னையில் இருந்தால் இனி கட்டாயம் அமமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் வருகை தருவாராம். இத்தனை நாட்களாக வீட்டில் வைத்து நடைபெற்ற சந்திப்புகள் இனி புதிய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.