ஆர்.கே.நகருக்கு குட்-பை சொல்லும் டிடிவி தினகரன்... தொகுதியை வலம் வரும் சற்குணப்பாண்டியன் மருமகள்..!
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து தஞ்சாவூருக்கு இடப்பெயர்ச்சி ஆகும் திட்டத்தில் இருக்கிறார் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன்.
இதனால் வரும் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் திமுக மகளிரணி நிர்வாகி சிம்லா முத்துச்சோழன் வரிந்துகட்டிக் கொண்டு களப்பணியை தொடங்கிவிட்டார்.
வடசென்னை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேஷ் வரும் தேர்தலில் அங்கு போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு டஃப் கொடுக்க சிம்லா ஆயத்தமாகிவிட்டார்.
ஸ்பெஷல் தொகுதி
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஆர்.கே.நகர் தொகுதி சற்று ஸ்பெஷலான தொகுதியாகும். காரணம் ஜெயலலிதா இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதோடு, தனது செல்வாக்கை நிரூபிக்க போராடி வந்த டிடிவி தினகரனுக்கு அரசியலில் மறு அங்கீகாரம் கொடுத்த தொகுதி ஆர்.கே.நகர். இப்படிப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் அண்மைக்காலமாக டிடிவி தினகரன் மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
தண்ணீர் தேங்கியது
கொரோனாவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதிப் பக்கமே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எட்டிப்பார்க்கவில்லை. மேலும், அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஆர்.கே.நகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கொதிப்படைந்த மக்கள் எம்.எல்.ஏ. தினகரனை காணவில்லை என தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தொகுதிக்குள் உலா
டிடிவி தினகரன் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் களத்தில் இறங்கி அரசியல் காய்நகர்த்தலை தொடங்கியிருக்கிறார் சற்குணப்பாண்டியன் மருமகள் சிம்லா முத்துச்சோழன். இவர் ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து கடந்த 2016-ம் ஆண்டு போட்டியிட்டவர் என்பதால் தொகுதி முழுவதும் அவருக்கு அத்துப்படி. அதேபோல் மக்கள் மத்தியிலும் நல்ல பரிச்சயம் இருப்பதால் மீண்டும் 2021-ல் அங்கு களமிறங்குவது என்ற திட்டத்தில் இருக்கிறார்.
அதிமுக உட்கட்சி
தாம் சார்ந்த சமுதாய பலம் ஆர்.கே.நகருக்குள் இருப்பதாலும், அதிமுகவில் ஜெயக்குமார்-மதுசூதணன் தரப்பிற்கிடையே உள்ள பனிப்போர் உள்ளதாலும் 2021-ல் தமது வெற்றி எளிதாக இருக்கும் என நம்புகிறார் சிம்லா முத்துச்சோழன். மகளிரணியில் பொறுப்பு வகித்தாலும் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக கட்சியில் பார்க்கப்படுகிறார். இதனிடையே அதிமுகவில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் மீண்டும் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம்
இதனிடையே ஆர்.கே.நகருக்கும் டிடிவி தினகரனுக்கும் பாலமாக இருந்த வெற்றிவேலும் மறைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கு குட்-பை சொல்லும் எண்ணத்திற்கு வந்துவிட்டார் தினகரன். வெற்றி இல்லாமல் சென்னையில் போட்டியிடுவது வீண் வேலை எனக் கருதும் அவர் சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் ஏதேனும் ஒரு தொகுதியில் இடப்பெயர்ச்சி ஆக இருக்கிறார்.