மக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்!
சென்னை: சென்னை தியாகராயநகர் இல்லத்தில், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் பற்றிய நிகழ்வுகளை பற்றி பேசவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.
வருகிற 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிரடி காட்டிய சசிகலா
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானவுடன் அவர் அதிமுகவை கைப்பற்றுவார் என்று யூகங்கள் பறந்தன. சசிகலாவின் பெங்களுரு டூ பெங்களூரு பயணம் இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தியது. பின்னர் சென்னை வந்த சசிகலா மிகவும் அமைதியாக இருந்தார். அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
பகீர் அறிவிப்பு
ஆனால் யூகங்கள் எல்லாம் மறைந்து போகும் வகையில், அரசியலில் இருந்து நான் விலகுகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும், அம்மாவின் பொற்கால ஆட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அ திமுகவுக்கு ஆதரவுகாட்டி சென்றார் சசிகலா. இதனை சற்றும் எதிர்பாராத டிடிவி தினகரன் மிகவும் அப்செட்டானார்.
தேர்தலில் வெற்றி பெறுவோம்
இந்த நிலையில் சென்னை தியாயராயநகர் இல்லத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் பற்றிய நிகழ்வுகளை பற்றி பேசவில்லை. மக்களின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். மார்ச் 8, 9-ம் தேதிகளில் நேர்காணல் நடக்க இருப்பதால் மார்ச் 7-ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும்.
வேட்பாளர்கள் அறிவிப்பு
ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வருகிற 9-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் .வருகிற 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது. மக்கள் எங்களை நிராகரிக்கும் வரையில் அரசியலில் இருப்போம் என்று டிடிவி தினகரன் கூறினார்.