எடப்பாடி பழனிச்சாமி சேலத்துக்கு மட்டும் முதல்வர் அல்ல.. கேரளாவை தடுத்து நிறுத்துங்க.. தினகரன்
சென்னை: முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மதுரை, தேனி, திண்டுக்கல்,ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதனைத் தடுக்கும் முயற்சியில் கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. கேரளாவில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்று துடிக்கிற பா.ஜ.கவும் அவர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறது.
மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளை விற்ற ராசிபுரம் கும்பல்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
தமிழக அரசு தடை
சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் முல்லைப் பெரியாறை இடித்து விட்டு புதிய அணை கட்டுதல், வாகன நிறுத்துமிடம் அமைத்தல் ஆகியவற்றை இந்தக் கட்சிகள் வாக்குறுதிகளாகவே மக்களிடம் கூறிவந்தன.இந்நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதைத் தடுப்பதற்காக பெரியாறு நீர்த் தேக்கப்பகுதியான ஆனவச்சலில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான பணிகளைச் சில ஆண்டுகளுக்கு முன் கேரள வனத்துறை தொடங்கியது. இதற்கு ஜெயலலிதா இருந்த போது தமிழக அரசின் சார்பில் தடை வாங்கப்பட்டிருந்தது.
தவறிய தமிழக அரசு
ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த தடையை நீக்கக் கோரி பெரியாறு புலிகள் சரணாலயம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்யப்பட்டது. அதில் வாகன நிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சரியான முறையில் தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வாதங்களை முன் வைக்கத் தவறி விட்டது. இதனால் கட்டடங்கள் இல்லாமல் வாகன நிறுத்துமிடம் மட்டும் அமைத்துக் கொள்ள கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துவிட்டது.
கேரள கட்டுமானம்
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வழக்கம் போல பசுமை தீர்ப்பாய உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு கட்டுமான பணிகளைத் தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சர்ச்சைக்குரிய இடத்தில் மண் கொட்டி, தரையை உயர்த்தி பேவர் பிளாக் கல் பதித்தல், சுற்றுச்சுவர் எழுப்புதல் ஆகிய பணிகளை கேரள அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர். வாகன நிறுத்தமிடத்திற்கு எதிராக நிலுவையில் இருக்கும் தமிழகத்தின் வழக்கை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
முழுவீச்சில் கேரளா
ஆனால், அதற்குள்ளாக கட்டுமான பணிகளை முடித்து திறப்புவிழா நடத்திட கேரளா அரசு முழுவேகத்தில் பணிகளை மேற்கொள்கிறது. அந்தப் பணிகள் நிறைவு பெற்றால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிக்கு பெரிய முட்டுக்கட்டை விழுந்துவிடும். இந்த விவகாரத்தில் இதற்கு மேலும் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்து, பிரச்சினையின் தீவிரத்தை நீதிபதிகளுக்குப் புரிய வைத்து கேரளாவின் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
பழிவாங்கும் முதல்வர்
சேலத்திற்கு மட்டுமே முதல்வராக இருந்து கொண்டு தமிழகத்தின் மற்ற பகுதி மக்களைப் புறக்கணிக்கும், அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் முதல்வர் பழனிசாமி இதற்கு மேலும் தூங்கிக் கொண்டிருக்கக்கூடாது.இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பாதிக்கப்படும் 5 மாவட்ட விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அமமுக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்" இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.