எதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்
டிடிவி தினகரனின் 55-வது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படவில்லை.
Recommended Video
சென்னை: இப்படி ஒரு பிறந்த நாளை டிடிவி தினகரன் சந்தித்திருக்கவே மாட்டார்!!
போன வருஷமாவது ஆர்.கே. நகர் வெற்றி களிப்பில் இருந்தார் தினகரன். அதனால் அந்த மக்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். திருப்பதிக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.
அங்கிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மூக்குப்பொடி சாமியாரை பார்த்து ஆசிர்வாதமும் வாங்கி கொண்டார். ஆனால் இந்த முறை அப்படி கிடையாது. எதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி!!!
திருவாரூர், திருப்பரங்குன்றம்
எல்லாருக்கும் முன்னாடி டிடிவி தினகரன்தான், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு சென்று களப்பணியில் ஈடுபட்டார் டிடிவி. எப்படியாவது ரெண்டில் ஒருதொகுதியையாவது பிடித்து விட வேண்டும் என்று அமமுக நிர்வாகிகளை அங்கு அனுப்பி தீயாக வேலை பார்த்தார்.
ரெட் அலர்ட் அரசியல்
மற்றொருபுறம் பொதுகூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வந்தார். ஆனால் எல்லாத்தையும் ரெட் அலர்ட் அரசியல் நாசம் செய்துவிட்டது. அதனால் டிடிவி-க்கு தலையில் இடியே விழுந்தது போல் ஆகிவிட்டது. ஆத்திரப்பட்டார், இது சம்பந்தமாக கோர்ட்டுக்கு போக போறேன் என்றும் சொன்னார்.
கடும் அப்செட்
இதற்கடுத்து 18 எம்எல்ஏக்கள் விவகாரம்! ரிசார்ட்டுகளில் தங்கி கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு வந்ததுதான் மிச்சம். அளவுக்கு அதிகமாகவே இந்த தீர்ப்பை நம்பியிருந்தார். கடைசியில் அரசுக்கு சாதகமாக போய்விடவும் திரும்பவும் அப்செட்!
செந்தில் பாலாஜி
இதனையடுத்து தான் எப்பவுமே குருவாக மதிக்கும், அளவு கடந்த நம்பிக்கை வைத்திந்த மூக்கு பொடி சாமியார் மறைவு மேலும் டிடிவியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் வலதுகரமாக இருந்த செந்தில் பாலாஜியின் அணி தாவல் செய்தி ஒட்டுமொத்தமாக நிலை குலைய வைத்துள்ளது.
வருமான வரித்துறை
பலமுறை செந்தில் பாலாஜியிடம் பேசி பார்த்தும் இன்னும் சுமூக பதில் எதுவும் வரவில்லை என தெரிகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக சிறையில் சசிகலா இருக்கிறார். இன்றைக்கு கூட அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீண்ட அமைதி
எனவே எப்படி திரும்பினாலும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் செய்திகள் எதுவுமே இல்லாதால் தனது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாட விரும்பவில்லை என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லை, தன் பிறந்த நாளுக்கு எந்த விளம்பரம் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். அடிமேல் அடியை தாங்கி வரும் டிடிவி தினகரனிடம் ஏற்கனவே இருந்த நீண்ட அமைதி, இன்றைய பிறந்த நாளிலும் வெளிப்படுகிறது.