பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. மக்களே போதும்.. டிடிவி தினகரன் நம்பிக்கை
2 தொகுதிகளில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: "பிரசாந்த் கிஷோரெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.. அமமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.. வரும் சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் கண்டிப்பாக போட்டியிடுவேன்.. அதற்குள் சசிகலா சிறையில் இருந்து வெளியாகி எங்களுக்காக பிரச்சாரம் செய்வார்" என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்தை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்... கழக கொடியையும் ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம்... மக்கள் செல்வாக்கு உள்ள அமமுகவுக்கு பிரஷாந்த் கிஷோரெல்லாம் தேவையில்லை.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதியிலும், தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியிலும் நான் போட்டியிடுவேன்.. சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது அதற்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார்... சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாகவே அவர் இருப்பார்..
டிடிவி, என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இந்நிலையில், சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இதையடுத்து முதல்வர் ஆகும் ஆசை தனக்கு இல்லை என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு "அது அவருடைய முடிவு, அது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. பெரியார், அண்ணாவைப்போல் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி கருத்து கூறும் சுதந்திரம் இருக்கிறது.. இது அவரது தனிப்பட்ட கருத்து" என்றார்!!