மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்.. வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம்- டிடிவி தினகரன்
சென்னை: மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம் என்றும் வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்றும் டிடிவி தினகரன் வேண்டுகோள் தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளில் தமிழகத்தில் திமுகவே வெற்றி பெறும் என்றும் டிடிவி தினகரனின் அமமுக தேர்தலுக்கு பிறகு பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரங்களின் நெருக்கடி, தன்னாட்சி அமைப்புகளின் ஒரு தலைபட்சமான முடிவு.. என அமமுகவுக்கு எதிராக எத்தனையோ அஸ்திரங்கள் தேர்தல் சமயத்தில் ஏவப்பட்டது. அவற்றை எல்லாம் துணிச்சலுடனும் அம்மாவின் உண்மை விசுவாசியான கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடும், எதிர்கொண்டு இந்த தேர்தல் களத்தை சந்தித்தது அமமுக.
புதிய சக்திகளாக உருவெடுக்கும் கமல், டிடிவி, சீமான்.. கருத்து கணிப்புகள் சொல்லும் சேதி இதுதான்!
கும்பல்
நம்பி வாக்களித்த மக்களுக்கு எதையும் செய்யாமல் அவர்களை நிர்கதியாக தவிக்கவிட்ட மத்திய அரசையும் அம்மாவின் லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் விரோதமாக தமிழகத்தில் ஆட்சியை நடத்தியது மட்டுமல்லாமல் அவரது ஆன்மாவே மன்னிக்க முடியாத அளவுக்கு துரோகக் கூட்டணி அமைத்த எடப்பாடி கும்பலை வீட்டுக்கு அனுப்பவும், மாநிலத்தில் 5 முறை ஆட்சியில் இருந்தும் மத்தியில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அங்கம் வகித்து தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் தங்கள் சுயலாபத்துக்காக முக்கிய இலாகாக்களை கேட்டு பெற்று லாபம் அடைந்த தீய சக்தியான திமுகவை விரட்டியடிக்கும் வகையிலும் தமிழகத்துக்கு காலம் தந்த வெற்றிச் சின்னமாம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தேர்தல் பிரசாரக் களத்திலும் சரி.. வாக்களிக்க நின்ற வரிசையிலும் சரி.. மக்களின் முகங்களில் இந்த உணர்வுகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
|
கூசாத காரியம்
இந்தப் பின்னணியில் அமமுக அபார வெற்றி என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை வளைத்து தங்களுக்கு சாதகமாக கருத்து கணிப்புகளை வெளியிடச் செய்தவர்களே இப்போது அடுத்த காரியத்தையும் கூசாமல் செய்திருக்கிறார்கள்
பங்களிப்பு
எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மக்களின் மனநிலையை படம் பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆட்சியை இழந்து வீட்டுக்கு போகும் நேரத்தில் இப்படி ஜனநாயக விரோதக் காரியத்தை கூசாமல் செய்திருக்கிறார்கள். தீய சக்தியான திமுகவும் இந்த சித்து விளையாட்டுக்களில் தனது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
பித்தலாட்டம்
இது மோசடியான கருத்துக் கணிப்பு என்பதற்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தினோம் என்று ஒரு விவரத்தை வெளியிட்டது பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சி. அதில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அதிகபட்சம் ஆறு சதவீதம் வாக்களித்ததாக மக்கள் சொன்னார்கள் என்று சொல்லப்பட்டது. அதாவது சுமார் 60 ஆயிரம் மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். நிஜம் என்ன தெரியுமா, அந்தக் கட்சி அந்த தொகுதியில் போட்டியிடவே இல்லை. வாக்கு இயந்திரத்தில் இல்லாத ஒரு பட்டனை அழுத்தி எப்படி மக்கள் வாக்களித்திருப்பார்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?
புறந்தள்ளுங்கள்
இந்த மோசடி அம்பலமானதும் அந்த ஆறு சதவீதத்தை பிரித்து பிரதான இரண்டு கட்சிகளுக்கு சேர்த்துப் போட்டிருக்கிறார்கள். இது அடுத்த பித்தலாட்டம். இப்படிப்பட்ட மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான இந்த கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. நமது கழகத் தொண்டர்களும் புறந்தள்ள வேண்டும் என தினகரன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.