தவிக்கும் தமிழர்களை மீட்பதில் இனியும் காலதாமதம் வேண்டாம் - டிடிவி தினகரன்
சென்னை: வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்பதில் இனியும் காலதாமதம் வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களை மீட்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குழு விரைந்து செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொரோனா பரவல்... மக்கள் மீது பழிபோடுவதை முதல்வர் நிறுத்த வேண்டும் -மு.க.ஸ்டாலின்
ஒரே இடத்தில் பலர்
வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழக தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. விசா காலம் முடிந்து பொதுமன்னிப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், பெருந்தொற்று நோய் பாதிப்பால் வேலையிழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சரியான உணவு, இருப்பிட வசதிகள் இன்றி குவைத்தில் தவித்து வருகின்றனர். ஒரே இடத்தில் பலரையும் அடைத்து வைத்திருப்பதால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமா என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மாநில அரசு
வெளிநாடுகளில் மட்டுமின்றி அந்தமான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கூலி வேலைகளுக்குச் சென்ற தமிழர்களும் சொல்ல முடியாத துயரங்களோடு அங்கே தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். மற்ற மாநில நிர்வாகங்கள், தங்கள் மக்களை அழைத்துவரச் செய்யும் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகாவது நமது மாநில அரசும் அப்படி செயல்பட்டிருக்க வேண்டாமா?
அதிகாரிகளுக்கு கோரிக்கை
எனவே, இனியும் தாமதிக்காமல் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழு விரைந்து செயல்பட்டு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வருவதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும்.
வலியுறுத்தல்
மேலும் அவர்களில் பலர் ஊருக்கு திரும்புவதற்கான பயணச்செலவுக்குக் கூட பணமில்லாமல் தவிப்பதால் தமிழக அரசே அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும்வரை உணவு, தங்குமிடம், மருத்துவம் ஆகிய அவசர உதவிகள் தமிழக தொழிலாளர்களுக்கு கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.