இப்படி ஒரு கட்டளையா.. அமமுகவினரை அதிர வைத்த டிடிவி தினகரன்.. அதிமுகவினர் மீது கடும் பாய்ச்சல்
சென்னை: அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவரக்ளின் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என்றும் அமமுகவினருக்கு டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு அமமுகவினர் பலர் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதேபோல் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துவிட்டனர்.
இந்நிலையில் அமமுக என்பது அதிமுகவின் இரண்டாவது அணியாகவும் இன்றும் பார்க்கப்படுகிறது. தற்போது தேர்தல் தோல்விக்கு பின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியினை வளர்ப்பதற்கு பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
வானகரத்தில் விழா
இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா டிடிவி தினகரன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் புகழேந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில ஆயிரக்கணக்கான மாற்றுகட்சியினர் அமமுகவில் இணைந்தனர். அப்போது டிடிவி தினகரன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதிமுக நமக்கு துரோகி
இதன்படி அமமுகவினர் அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக எப்படி நமக்கு எதிரியோ அதுபோல் அதிமுக நமக்கு துரோகி: என டிடிவி தினகரன் கட்சியனருக்கு வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாகிகளின் குறைகள்
இந்த கூட்டத்தில் தினகரன் மேலும் பேசுகையில், அம்மாவுடன் 30 வருடம் அரசியலில் பயணித்தவன் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் சிலர் மீது குறைகள் இருப்பினும் அதை ஊடுருவி அது சரியா என்பதை என்னால் ஆராய முடியும்.
புறக்கணிக்கப்பட்ட ஆட்சி
தமிழக மக்கள் விரும்பாத மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கட்சியைப் பதிவு செய்தபின் சின்னம் பெற்று அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம்.எதிர்காலத்தில் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.