தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து 2 ஆண்டுகள்... நீதி கிடைக்கும் வரை துணை நிற்பேன் -தினகரன்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது தமக்கு வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்பதை உணர்ந்து தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"புளியை கரைக்கும்" புளியந்தோப்பு.. ஜெபக்கூட்டம், டெல்லி மாநாடு, ஜன நெரிசல்.. வேகம் எடுக்கும் கொரோனா!
குண்டுகள் பாய்ச்சி
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே கறுப்பு நாள் என்று சொல்லுமளவுக்கு 2018, மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் காவல்துறையினரால் சொந்த மக்களே வேட்டையாடப்பட்டனர். நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை தலை,நெற்றி, வாய், கழுத்து,மார்பு, வயிறு ஆகிய இடங்களில் குறிவைத்து குண்டுகளைப் பாய்ச்சி கொன்று குவித்தனர்.
2 ஆண்டுகள் நிறைவு
‘மக்களுக்காகதான் திட்டங்களே தவிர,திட்டங்களுக்காக மக்கள் இல்லை'என்ற அம்மா அவர்களின் வார்த்தைகளை மறந்து நிகழ்த்தப்பட்ட இந்த வெறியாட்டம் நடந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐக்கு மாற்றிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நான்கே மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அழுத்தம் தர வேண்டும்
ஆனால் இதுவரை வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அதே போல பழனிசாமி அரசு அமைத்த மாண்புமிகு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் தனது விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்பதை உணர்ந்து தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.
வடுக்கள் மறையவில்லை
தூத்துக்குடி மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் வடுக்கள் இன்னும் மறையாத சூழலில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் என்றைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்கும் என்ற உறுதியை அளித்து, உயிரிழந்தவர்களுக்கு இரண்டாமாண்டு நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.