வெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்!
சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்பு என தினகரன் பேட்டி அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: கூடிய சீக்கிரம் சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று தெரிகிறது. அப்படி வெளியே வந்தால் நிம்மதி யாருக்கு என்றால் அதிமுக, பாஜகவுக்காத்தான் இருக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
சசிகலா ஜெயிலுக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. அன்னைக்கு இவர் ஜெயிலுக்கு போகும்போது அமமுக என்ற ஒரு கட்சியே இல்லை.
எல்லாரும் ஒத்துமையா இருந்து அதிமுகவை வழிநடத்தணும்னு அன்று சொல்லிவிட்டு போனார் சசிகலா. ஆனால் அவர் சிறைக்குள் சென்ற நாளிலிருந்து நடந்த விஷயங்கள் ஒன்றுகூட அவருக்கு ஆதரவாகவும், சந்தோஷமாகவும் அமையவில்லை.
நடராஜன்
அரசியல் ஒரு பக்கம் என்றால், குடும்ப சூழல் அதற்கு மேலாக இருக்கிறது. எல்லாம் சொத்து பிரச்சனைதான்.. டிடிவி தினகரனை தவிர்த்து, விவேக், நடராஜன் குடும்பத்தார், கிருஷ்ணபிரியா, அனுராதா உள்ளிட்டோர் எத்தனையோ முறை குடும்ப விஷயங்களை கொண்டு போய் சசிகலாவிடம் முறையிட்டுள்ளனர். சொத்து விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் ஏதோ சிக்கல் என்று மட்டும் தகவல் கசிந்தது.
கரைந்து விட்டது
விவேக்-தினகரன் மோதல் போக்கு இன்னமும் நீடித்து வருகிறது. தினகரனின் செயல்பாட்டால் அமமுகவும் கரைந்துவிட்டது. அதனால் எப்படியும் சசிகலாவுக்கு தினகரன் மீதுதான் செம கடுப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்வியில் இருந்தே மீள முடியாத நிலையில் சசிகலா உள்ள நிலையில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புகழேந்தி
இந்த சமயத்தில்தான் நன்னடத்தை விதி காரணமாக சீக்கிரமாக விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட தகவல்கள் உலா வந்தாலும், இப்போது, அமமுகவின் புகழேந்தியே சொல்லி உள்ளார். அதேபோல, தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனும், "சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். தினகரனே இப்படி சொன்னாலும், நிச்சயம் சசிகலாவுடன் மோதல் ஏற்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
திவாகரன்
ஒருவேளை மோதல் போக்கு உருவானால் தினகரனுடன் சசிகலாவின் டேமேஜ்-ம் சேர்ந்து உடையும் சூழல் ஏற்படலாம். அப்படி எதுவும் நடக்காவிட்டாலும், அதனை உருவாக்க அதிமுகவே ஏதாவது வேலையில் இறங்கலாம். இது போக, திவாகரன் சசிகலாவை தன் பக்கம் இழுத்து, தினகரனை தனிமைப்படுத்தவும் முயற்சி செய்யலாம்.
மூத்த தலைவர்கள்
அதேபோல, அதிமுகவின் மூத்த தலைவர்கள் சசிகலாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள், சில அமைச்சர்கள் இன்னமும்கூட "சின்ன அம்மா" என்று பேசி வரும் நிலையில், அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க போகிறது.. இரட்டை இலை சின்னம் கோரும் விவகார வழக்கு என்னாக போகிறது.. எத்தனை பேர் இப்போது சசிகலாவுக்கு எதிராக திரும்பி உள்ளனர்? என்ற பல கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டி நிற்கின்றன. என்றாலும் இது எல்லாவற்றிற்கும் பதில் சசிகலாவிடம்தான் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்!