திருமாவுக்கு தூது விடும் தினகரன்... கூட்டணியை கட்டமைக்கும் பணி தீவிரம்
சென்னை: திருமாவளவன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது முதலே திமுகவுக்கும், விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஜெ.அன்பழகன் திருமா மீது வெறுப்பை உமிழ்ந்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், திருமாவை தன்னுடன் இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக மக்கள் நலக் கூட்டணி என்கிற பெயரில் வி.சி.க., மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து களம் கண்டன. இதனால் சொற்ப வாக்குகளில் பல இடங்களில் திமுக தோல்வியை தழுவியதால் இன்று எதிர்க்கட்சியாக உள்ளது.
மக்களவைத் தேர்தல்
இந்நிலையில் பழைய கசப்புகளை மறந்து பெரும்போக்குடன் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிகளுக்கு எல்லாம் தலா இரண்டு இடங்களை கொடுத்து வெற்றிபெற வைத்தார். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தது திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை அளித்தது.
நேரு சமாதானம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திருமா மீது புகார்களை கூறி பாய்ந்தார் ஜெ. அன்பழகன். அவரை சமாதானம் செய்து வைத்து நேரு, நாமாக யாரையும் அனுப்ப வேண்டாம், அவர்களாகவே சென்றுவிடுவார் எனப் பேசினார்.
நிர்வாகிகள் கோபம்
திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் கூட்டணிக் கட்சித் தலைவரை விமர்சிப்பதா, அதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது என வி.சி.க. நிர்வாகிகள் கொந்தளித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய திருமா, பொறுமைக்காக்குமாறும், கூட்டணி விவகாரத்தில் அவசரப்படக் கூடாது என்றும் சொல்லிவைத்தார்.
சாதகம்
திமுக-வி.சி.க. இடையேயான உறவில் இப்போது கீறல் விழுந்ததை அறிந்துக்கொண்ட டிடிவி தினகரன், இதனை சாதகமாக பயன்படுத்தி திருமாவை தன் பக்கம் இழுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருமாவும் தினகரனின் தூதை அலட்சியப்படுத்தவில்லையாம்.