"வக்கிரமம்.. மனசு பூரா அழுக்கு.. அவர் வந்த வழி அப்படி".. உதயநிதியை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்
உதயநிதி ஸ்டாலினை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்களை பதிவிட்டுள்ளார்
சென்னை: திமுகவின் உதயநிதி ஸ்டாலினை இந்த அளவுக்கு யாருமே விமர்சித்திருக்க மாட்டார்கள், கண்டித்திருக்க மாட்டார்கள்.. அந்த அளவுக்கு 3 ட்வீட்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்கள்தான் தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
உதயநிதியை பொறுத்தவரை, மிக குறுகிய காலத்தில் பதவிக்கு வந்தவர் என்றாலும், அனைவரும் மலைக்கும்படி, அந்த பொறுப்பை நிர்கித்து வருகிறார்.. சில அதிரடிகளையும் கையில் எடுக்கிறார்..
திமுகவின் சில சீனியர்களே பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதியின் வளர்ச்சி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேசமயம், தன்னுடைய பிரச்சாரங்களிலும் பேட்டிகளிலும் உதயநிதியின் பேச்சு எதிர்தரப்பினருக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.
விமர்சனம்
வயதில் பெரியவர்கள், மூத்த தலைவர்கள் என்ற எதுவுமே பாராமல், உதயநிதி இப்படி தாறுமாறாக விமர்சனம் செய்கிறாரே என்ற கருத்தும் நிலவி வருகிறது.. ஆனால், இதுவரை இப்படியெல்லாம் ஸ்டாலின் பேசியதே கிடையாது.. யாராக இருந்தாலும், கண்ணியத்துடன், நாகரீகத்துடன், அனைவரையும் விமர்சித்து பழக்கப்பட்டவர் ஸ்டாலின்.. யாரையுமே தரக்குறைவாக பேசியது இல்லை.
சசிகலா
இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் போன்றோர் பதவிகளை பெற்றது குறித்து உதயநிதி சமீப கால பிரச்சாரங்களில் விமர்சித்து பேசி வருவதாலும், அப்படி பேசும்போது சசிகலாவையும் அதில் தொடர்புபடுத்தி கூறுவதாலும்தான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. மொத்தம் 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்..
கருணாநிதியின் பேரன்
அதில், "பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்" என்றும், "கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும்" என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சமூகம்
மேலும், "தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது" என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு, எதிர்ப்பு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
விடுதலை
சசிகலா விடுதலையாகும் நேரத்தில் வேறு ஏதும் வழக்குகள் தொடுத்துவிடக்கூடாது என்பதற்காக திமுகவை எதிர்த்து பதிவு போடுகிறீர்களா? என்றும், பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக முக்கிய நிர்வாகி சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை சிபிஐ தெரிவித்துள்ளது இதை கண்டிக்கவில்லையே? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தாய்க்கழகம்
அது சரி.. சசிகலாவை சம்பந்தப்படுத்தி உதயநிதி பேசுகிறார் என்பதற்காக இந்த ட்வீட்டை தினகரன் பதிவிட்டாரா? அல்லது எடப்பாடியார், ஓபிஎஸ்ஸையும் இழிவுபடுத்தி பேசிசுறார் என்பதற்காக ட்வீட்டை பதிவிட்டாரா என்று தெரியவில்லை.. எப்படியோ 2 தரப்பும் ராசியானால் சரி..!