முலாம் பூசப்பட்ட போலி.. போனால் போகட்டும்.. தினகரன் பொளேர் அறிக்கை
கட்சியை விட்டு யார் சென்றாலும் கவலை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு முலாம் பூசப்பட்ட போலி என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்து உள்ளார். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யார் வருத்தப்படப் போகிறார்கள் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் வினவி உள்ளார்.
சில தினங்களாகவே டிடிவி தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய போவதாக செய்திகள் வலம் வந்தபடி உள்ளன. ஆனால் இதற்கு இதுவரை செந்தில் பாலாஜி எந்தவித விளக்கமோ, மறுப்போ அளிக்கவில்லை.
இந்நிலையில் டிடிவி தினகரன் இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் செந்தில்பாலாஜி முலாம் பூசப்பட்ட போலி என்றும், முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் யார் வருத்தப்படப்போகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|
வியப்பு இல்லை
அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் சொல்லியுள்ள முக்கிய சாராம்சம் இதுதான்: "பல கட்சிகளுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும், படபடப்பையும் ஏற்படுத்துவதாகவும், எதிர்கால அரசியலை தீர்மானிக்க போகின்ற இயக்கமாகவும், அமமுக திகழ்வதில் வியப்பேதும் இல்லை.
முடக்க முயற்சி
காரணம், ஜெயலலிதாவின் பெயரில் நாம் செயல்படுவதால் தான். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துதான் இந்த விஸ்வரூப வளர்ச்சியை நாம் பெற்றிருக்கிறோம். இந்த எழுச்சியை தடுக்கவும், மக்கள் பணியில் நமது முன்னேற்றத்தை முடக்கவும், முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேதம் ஓதும் சாத்தான்
துரோகிகளும், நம் எதிரிகளும் முழு மூச்சாகவும், தீவிரமாகவும் அதில் ஈடுபட்டுள்ளனர். துரோகத்தை வேரறுக்க, தியாகத்தின் பின் அணிவகுத்து நிற்கின்ற நம்மை மீண்டும் அவர்களோடு இணைய அழைக்கும் துரோகக் கூட்டத்தின் செயலும், சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.
இலைகள் உதிர்கின்றன
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அதிமுக (அம்மா) என்ற பெயரில் நாம் இயங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்த ஒரு ஒன்றிய கழகச் செயலாளர், நேற்று கட்சியை விட்டுச் சென்றுவிட்டாராம், அதனை தற்போது ஊடகங்களில் பெரிதுபடுத்தி காட்டப்படுகிறது. ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா?
முலாம் பூசப்பட்ட போலி
ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுயநலனுக்காக விலகிச் செல்வதால், கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பார்களேயானால், அது, 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும்' என நினைப்பது போன்றது. சுத்த தங்கங்களாகிய நீங்கள் இருக்கின்றபோது, முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தபோகிறார்கள்?
அமமுக - மின்சாரம்
ஜெயலலிதாவின் கொள்கைகள்தான் நமது அடிப்படை, மக்கள் நலன்தான் நமது பணி, இதற்கு முரணான எண்ணம் கொண்டவர்கள் விலகி நிற்பது நலமே. தூய தொண்டர்களாகிய உங்களைக் கொண்ட அமமுகவை, யாராலும் தீண்டி பார்க்கவும் முடியாது, சீண்டி பார்க்கவும் முடியாது. அப்படிச் செய்தால், அது உயர் அழுத்த மின்சாரத்தைத் தொடுவதற்கு சமம்" என்று டிடிவி தினகரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.