பழைய பல்லவியை பாடி... தவறை மக்கள் தலையில் கட்டிவிட்டு... அரசு தப்பிக்க முயலக்கூடாது -டிடிவி தினகரன்
சென்னை: கொரோனா பரவல் விவகாரத்தில் தவறை மக்கள் தலையில் கட்டிவிட்டு அரசு தப்பிக்க நினைப்பதை ஏற்க முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நோய்த்தொற்றினால் பலியாவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உச்சத்தில் கொரோனா.. தடுக்க என்ன வழி.. மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
அதிகரிக்கும் உயிரிழப்பு
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அச்சமூட்டி வந்த நிலையில், தற்போது உயிரிழப்புகளும் வேகமாக உயரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில நாட்களாகவே வேறெந்த நோய்க்கும் ஆளாகாமல் கொரோனாவால் மட்டும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஆட்சியாளர்கள் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூசி மெழுகக் கூடாது
உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில், ‘சோதனைகளை அதிகப்படுத்துவதால் பாதிப்பு அதிகம் தெரிகிறது' என்று அதே பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப ஆட்சியாளர்கள் பாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிகிச்சை வசதிகளைப் பொறுத்தமட்டில் இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே தமிழகம் இருக்கிறது என்ற கண்ணெதிரே தெரிகிற உண்மையையும் அரசு பூசி மெழுக நினைக்கக்கூடாது.
அரசு ஆவணங்கள்
அரசு ஆவணங்களில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டதாக சொல்லப்படும் 236க்கும் அதிகமான மரணங்களை சேர்க்காமல், இதுவரை 479 உயிர்களை கொரோனாவால் நாம் இழந்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை உணர்ந்து, சரியான திட்டமிடுதலோடு அரசு எந்திரம் மொத்தமும் ஒருங்கிணைந்து செயல்படுவதே பாதிப்புகளைத் தடுக்க உதவும்.
தவறுகள்
மக்களின் ஒத்துழைப்போடுதான் கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் தங்களின் தவறுகள் எல்லாவற்றையும் மக்களின் தலையில் கட்டிவிட்டு ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பதை ஏற்க முடியாது!.