கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக மாற்ற டிடிவி. தினகரன் எடுத்துள்ள முடிவு காலதாமதமானது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படியாக தலைமைக் கழகத்தின் மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும் என்றார்.
மேலும், தமிழகத்தில் குறைவான வாக்கு சதவீதம் பதிவு குறித்த கேள்விக்கு சராசரியாக தமிழகம் முழுவதும் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மதுரையில் திருவிழா நடைபெறுவதால் குறைவான வாக்கு சதவீதம் இருந்துள்ளது என்றும் கூறினார்.
புதிய வாக்காளர்கள் 18% அதிகமானதால் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, புதிய வாக்காளர்கள் அனைவரும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே வாக்களித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிலளித்தார்.
தமிழ்நாடு 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைத்து தொகுதிகளிலும் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமமுக தனிக்கட்சியாக பதிவு செய்யப் போவதாக கூறி உள்ளது என்ற கேள்விக்கு, அது அவர்களின் இஷ்டம். எந்த காலத்திலும் அதிமுகவை அவர்கள் உரிமை கோர முடியாது. இந்த நிலையை நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தோம். அவர் (டிடிவி. தினகரன்) காலதாமதமாக முடிவெடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார். 4 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.