டிடிவி தினகரனிடம் மு.க.அழகிரி கத்துக்க எக்கச்சக்க மேட்டர் இருக்கு!
டிடிவி தினகரனுக்கு இந்த கூட்டம் எப்படி சாத்தியமாயிற்று?
சென்னை: ஒரே ஒரு அமைதி ஊர்வலத்தை நடத்தி ஆளும் தரப்பு உட்பட எல்லாரையும் தன் பக்கம் திரும்ப வைத்து விட்டார் அமமுக தலைவர் டிடிவி தினகரன்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு நாள் நேற்று. சென்னையில் அதிமுக அமைதிப் பேரணி நடத்தியது. அதேபோல அமமுகவும் பேரணி நடத்தியது. ஆனால் அதிமுகவுக்கு வந்ததை விட பல மடங்கு அதிக கூட்டம் தினகரனுக்கு கூடியதுதான் இன்றைய ஹைலைட்.
இந்தக் கூட்டத்தை அதிமுக உள்பட எந்தக் கட்சியும் எதிர்பார்க்கவில்லை. மெரினாவில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு தினகரன் ஆட்களை திரட்டி கொண்டுவந்தாரா? என்ற சந்தேகம் எல்கேஜி குழந்தைகளுக்குக் கூட எழாது. காரணம், இப்போதெல்லாம் பேரணி என்றாலே கூட்டிக் கொண்டு வருவதுதான்.
பணம் காரணமா?
ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவுக்குக் கூட கூடாத கூட்டம் தினகரனுக்கு வந்துள்ளது என்றால் அது பணத்தால் மட்டும் வந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, உண்மையான தொண்டர்கள் தினகரன் பக்கம் இருப்பதையே காட்டுவதாக கருதப்படுகிறது.
அதிருப்தி
தினகரன் என்றாலே பணத்தை வாரி இறைப்பார், அதனால் எளிதாக கூட்டத்தை திரட்டிவிடுவார் என்ற கருத்து எப்பவுமே இருக்கிறது. ஆனால் உண்மையில் இது திரட்டி வந்த கூட்டம் இல்லை என்று பேசப்படுகிறது. அதிமுக மேல் அக்கட்சி உறுப்பினர்களுக்கு உள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம் என்றுதான் கூறப்படுகிறது.
விஜயகாந்த் மாநாடு
எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் டிடிவி பக்கம் பெரும்பாலும் வந்துள்ளனர். ஜெயலலிதா கூட்டணிக்கு தேமுதிக வருவதற்குமுன்பு, இப்படித்தான் விஜயகாந்த் ஒரு மாநாட்டை நடத்தினார். அப்போது தேமுதிகவுக்காக திரண்ட கூட்டம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இன்னும் சொல்லப்போனால் போயஸ் கார்டனில் கேப்டன் டிவி ஓடிகொண்டிருந்தது!
அமைதி பேரணி
விஜயகாந்தின் இந்த கூட்டம்தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் காரணமாக இருந்தது. அப்படித்தான் இப்போது தினகரன் நிலைமையும் மாறி உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் இது ஒரு அமைதி பேரணி. இந்தக் கூட்டத்தால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அழகிரி பேரணி
திமுக தரப்பிலோ உஷாராகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், தினகரனுக்கு கூடும் கூட்டத்தில் திமுகவை விட அதிமுகவுக்குத்தான் அதிக ஆபத்து என்பதால் திமுக தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்த இடத்தில் மு.க.அழகிரிக்கு ஒரு மெசேஜ் இருக்கு.. சென்னையில் அவரும்தான் ஒரு அமைதிப் பேரணி நடத்தினார்.. ஆனால் கூடிய கூட்டம்.. தினகரனிடம் அழகிரி கற்றுக் கொள்ள நிறையவே இருக்கு!