இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி
Recommended Video
சென்னை: இருந்தால் இருக்கட்டும்; போனால் போகட்டும் என்று டிடிவி தினகரன் படு கேர்லெஸ்ஸாக இருக்கிறாராம். நிர்வாகிகள்தான் கடுப்பாகின்றனராம்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அமமுக கூடாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை பிடித்து வைக்க டிடிவி தினகரன் எந்த சிரத்தையும் மேற்கொள்வதில்லை.
அவரைப் பொறுத்தவரை யாரையும் தாங்கிப்பிடித்து வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும், வெளியேறும் முடிவு எடுத்தவர்களை இருக்கவைத்து வேலை வாங்க முடியாது எனவும் எண்ணுகிறாராம்.
நெல்லை மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு போகும் தகவல் கிடைத்ததும், 'அண்ணே நீங்க ஒருமுறை பாப்புலரிடம் பேசுங்க, அவர் போக மாட்டார்' என நிர்வாகிகள் சொன்னார்களாம். ஆனால் அதை சட்டை செய்யாமல், 'இருந்தால் இருக்கட்டும்; போனால் போகட்டும்' என சிரித்துக்கொண்டே கூறிவிட்டாராம்.
தாமரைக்கனியின் மகன் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அதிமுகவுக்கு போனதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தேர்தல் செலவில் அவர் முறைகேடு செய்துவிட்ட்தாக டிடிவிக்கு புகார் போனதாம். இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்ததால், அவர் கோபத்தில் வெளியேறிவிட்டாராம்.
இதேபோல், டிடிவி மீது திருச்சி புறநகர் மாவட்டச்செயலாளர் மனோகர், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய இசக்கி சுப்பையா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 6 பேர் என அனைவரும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
கூடிய விரைவில் அவர்களும் அமமுகவில் இருந்து சிறகை விரித்து பறக்க தயார் ஆகிவிட்டார்களாம். ஆனால் தினகரனைப் பொறுத்தவரை தனது நிலையில் தெளிவாக உள்ளார்களாம். முடிவெடுத்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் இப்படியே போனால் கடைசியில் தினகரன் மட்டும்தான் கட்சியில் மிஞ்சுவார் என அமமுக நிர்வாகிகள் புலம்புகின்றனராம்.