தினகரனை திடுக்கிடச் செய்த பரணி கார்த்திகேயன்.. ஒரே நாளில் எடுத்த முடிவா..?
Recommended Video
சென்னை: அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் நேற்று திமுகவுக்கு தாவியது டிடிவி தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.ரத்தினசபாபதியின் தம்பி பரணி கார்த்திகேயன். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த செல்வாக்கை கண்டு டிடிவி தினகரன் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கினார்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் அவரை எதிர்த்து தில்லாக அரசியல் செய்து வந்தார் பரணி கார்த்திகேயன்.
சசி உறவினர்
சசிகலா உறவினர் குடும்பத்தில் பரணி கார்த்திகேயன் சம்பந்தம் முடித்திருப்பது அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்திருந்தது. அதிமுக ஆட்சிக்கு எதிராக சினுங்கிய ரத்தினசபாபதியை வழிக்கு கொண்டு வந்தது போல், பரணி கார்த்திகேயனையும் அதிமுகவுக்குள் இழுக்க விஜயபாஸ்கர் தரப்பில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் பரணி கார்த்திகேயன் எதற்கும் மசியவில்லை.
பரணி ரகசியம்
மேலும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் டிடிவி தினகரன் மீது பரணி கார்த்திகேயனுக்கு சிறிய மனவருத்தம் ஏற்பட்டதை தெரிந்துக்கொண்ட திமுகவினர், அவரை இழுப்பதற்கான பணிகளை தொடங்கினர். செந்தில்பாலாஜியும் திமுகவுக்கு வந்தால் எந்த வகையில் எல்லாம் நல்லது என பரணி கார்த்திகேயனிடம் கிளாஸ் எடுத்துள்ளார். இதையடுத்து திமுகவுக்கு தாவும் முடிவுக்கு வந்த பரணி கார்த்திகேயன், அதுபற்றிய சிறிய தடம் கூட வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
தினகரன்
ஒரு மாதத்துக்கு முன்பே கட்சி மாறும் முடிவு எடுத்த பரணி, திமுகவில் சேர்வதற்கு முதல்நாள் வரை அமமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 3-ம் தேதி திமுகவில் சேரும் நிலையில் 1-ம் தேதி திருச்சிக்கு வருகை தந்த தினகரனை வரவேற்று திருச்சி மாவட்ட தினசரி நாளிதழ்களில் கால் பக்க அளவுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார். மேலும், மனோகரன் இல்ல மண விழாவில் தினகரனை வரவேற்று இருக்கையில் அமரவைத்ததுடன் அவருக்கு நேர் பின்வரிசையில் தான் அமர்ந்துள்ளார்.
அதிர்ச்சியில் தினகரன்
இப்படி யாருக்கும் தன் மீது சந்தேகம் வராத வகையில் நடந்துகொண்ட பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைய உள்ள செய்தி 3-ம் தேதி காலையில் தான் தினகரனுக்கு கிடைத்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியான தினகரன், அவரை தொடர்புகொண்டு தானே பேச முடிவெடுத்து முயன்றுள்ளார். ஆனால் பரணி தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதை உணர்ந்து முயற்சியை கைவிட்டு விட்டாராம்.
தினகரன் மாமா திவாகரன்
பரணி கார்த்திகேயன் திமுகவுக்கு வந்ததற்கு தினகரனின் மாமா திவாகரனும் ஒரு காரணம் என்றும், அவர் காட்டிய சிக்னலை அடுத்தே பரணி துணிந்து இங்கு வந்திருக்கிறார் எனவும் புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர் தெரிவிக்கின்றனர். கூடுதல் சிறப்பு என்னவென்றால் கடந்த 2011-ல் கருணாநிதியை எதிர்த்து திருவாரூரில் போட்டியிட்ட குடவாசல் ராஜேந்திரனின் மருமகன் தான் இந்த பரணி கார்த்திகேயன்.