சத்தமின்றி சித்தியை சந்திக்கும் டிடிவி தினகரன்... சின்னம்மா இயக்கத்தில் அமமுக
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து முக்கிய அரசியல் முடிவுகள் பற்றி ஆலோசனை செய்திருக்கிறார்.
மேலும், சசிகலா ஒப்புதலுடன் தான் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகத்தையும் அவர் நிறுவினாராம்.
அடுத்தாண்டு ஜனவரி இறுதியில் சசிகலாவின் தண்டனைக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு முன்னரே அவரை வெளியே கொண்டுவர முயற்சிகள் நடக்கிறதாம்.
சொத்துக்குவிப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ-2 குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால சிறைதண்டனையில் மூன்றாண்டுகள் அனுபவித்து விட்டார். இன்னும் எஞ்சியிருப்பது ஒரு வருடம் மட்டுமே என்பதால் இப்போதே அரசியல் நகர்வுகள் பற்றியும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தனது அக்கா மகனும், அமமுக பொதுச்செயலாளருமான தினகரனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா.
சசியுடன் சந்திப்பு
முன்பெல்லாம் டிடிவி தினகரன் பெங்களூரு சென்று தனது சின்னம்மாவை சந்தித்து பேசுவது தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. ஆனால் இப்போதோ அவர் அங்கு செல்வதும் தெரிவதில்லை, சந்தித்து ஆலோசனை நடத்துவதும் தெரியவில்லை, அந்தளவிற்கு தனது பயணத்திட்டம் பற்றிய தகவலை ரகசியம் காக்கிறார் தினகரன். திவாகரன் முன்பு தன்னை தனது சின்னம்மா விட்டுக்கொடுக்காதது தினகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரிய உற்சாகமாக உள்ளது. இதனால் முன்பைவிட இப்போது தனது சித்தி மீது அதிக பாசமழை பொழிகிறார் டிடிவி.
அரசியல்
சிறையில் இருந்து வெளியே வந்ததும் நேரடி அரசியல் செய்வதா இல்லை தினகரன் மூலமே திரைமறைவு அரசியலில் ஈடுபடுவதா என ஆழ்ந்து சிந்தித்து வருகிறாராம் சசிகலா. மேலும், இனிமேற்கொண்டு நேரடி அரசியல் செய்தால் அது எடுபடுமா என்ற கோணத்திலும் சசிகலா யோசனை செய்கிறாராம். இதனிடையே கடந்த வாரம் அமமுக தலைமை அலுவலக தொடக்க விழாவில் பேசிய தினகரன், சின்னம்மா இனி நம்முடன் தான் இருப்பார் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கூறினார் தினகரன்.
கவலை
பெங்களூரு சிறை வாழ்க்கை சசிகலாவுக்கு வலிமையான மன உறுதியை கொடுத்துள்ளது எனவும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாறாக சசி விடுதலையாவதால் அவர்களுக்கு தான் பதற்றம் பற்றிக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. சசிகலாவுக்கு இருக்கும் ஒரே கவலை குடும்ப உறவுகள் சிதறியதும், ஆட்சியில் இருந்தும் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக அரசு காலதாமதம் செய்வதும் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.