ஆக, போற போக்கை பார்த்தால்.. "மக்கள் செல்வன் நலக் கூட்டணி" உருவாகிடுமோ!!!
டிடிவி தினகரன் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி உருவாகும் என தெரிகிறது.
Recommended Video
சென்னை: போற போக்கை பார்த்தால் மீண்டும் மக்கள் செல்வன் நலக்கூட்டணி ஒன்று டிடிவி தினகரன் தலைமையில் உருவாகி விடும் போல் இருக்கிறது.
இப்போதுவரை தேமுதிக கேட்ட தொகுதிகளை தராமல் அதிமுக போக்கு காட்டி வருகிறது. யதார்த்தத்தை புரிந்து கொண்டு கிடைப்பதை வாங்கிகொள்வோம் என்ற தன்மை தேமுதிகவுக்கு இன்னமும் வராமல் இருக்கிறது. இதனால்தான் இழுபறியாக உள்ளது.
இதில் ஏடாகூடமாக பேசி இருக்கும் மரியாதைகளை அக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் ஏற்கனவே தர இருந்த 4 சீட்டுகளில் 3, 2 என்று அதிமுக குறைத்து கொண்டே போகிறதாம்.
கடைசில விஜயகாந்த்தை இப்படி "வசனம்" பேச வச்சுட்டீங்களேப்பா.. !
டிடிவி தினகரன்
4 தருவதையே வேண்டாம் என்றவர்கள் 3, அல்லது 2 தந்தால் வாங்கவா போகிறார்கள்? அதனால் எப்படியும் டிடிவியுடன் கூட்டணி வைக்க கூடும் என்ற தகவல் வருகிறது. இப்போதைக்கு தேமுதிகவுக்கு தேவை யார் "நிறைய " தருகிறார்களோ.. அவர்களுடன்தான் கூட்டணி என்பது. இது ஓரளவுக்கு தினகரனிடம் சாத்தியமாகும்.
சரத்குமார்
ஒருவேளை விஜயகாந்த் தினகரனுடன் கூட்டணி அமைத்தால், சரத்குமாரையும் கூடவே அழைத்து கொண்டு போகும் அளவுக்கு நெருக்கமும் நட்பும் உள்ளது. ஏற்கனவே தினகரனிடம் மனிதநேய மக்கள் கட்சி சேருவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இதை எப்படியோ நாளை ஜவாஹிருல்லா அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, எங்கள் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தினகரனே சொல்லிவிட்டார்.
வேல்முருகன்
இது போக இன்னொரு தகவலும் கசிகிறது.. அது வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி தினகரனுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்பதுதான். இதற்கான அறிவிப்பும் நாளை வெளியாகும் என சொல்லப்படுகிறது. பாமகவின் 7 தொகுதிகளிலும் வாக்குகளை பிரிக்க வேல்முருகனின் பங்கு முக்கியமாக இருக்கும் என்று தினகரன் நினைப்பதாக தெரிகிறது. அதனால்தான் அவரை தன் கூட்டணிக்கு இழுத்துள்ளதாம்!
செலவுகள்
ஆக மொத்தம், தினகரன், விஜயகாந்த், சரத்குமார், வேல்முருகன் தலைமையில் இன்னொரு மக்கள் நலக்கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நிச்சயம் கூட்டணி கட்சிகளின் செலவுகளை தினகரன் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை கட்சி தலைவர்களுக்கே உள்ளது. (இதில் வைகோ திடீரென வந்த சேருவாரா என்ற திகில் எதிர்பார்ப்பும் உள்ளது)
நிதானம்
மேலும் கூட்டணிக்காக யாரிடமும் இதுவரை தினகரன் இறங்கி செல்லவில்லை.. கூட்டணிக்காக கொள்கை தர்மங்களை விட்டுத்தரவும் இல்லை. தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டு, ஒரு தலைமை ஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். ரொம்ப நிதானம் காட்டுகிறார். அனுபவத்தை அழகாக பயன்படுத்துகிறார், திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.
18 எம்எல்ஏக்கள்
அதனால் சத்தமே இல்லாமல் தினகரனின் 3-வது அணி உருவாமா? அது ஒரு மக்கள் நலகூட்டணியாக இருக்க போகிறதா? என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த், சரத்குமாருடன் தன்னை இத்தனை காலமாக நம்பி கூடவே இருக்கும் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களையும் சேர்த்தே தினகரன் அரவணைத்து செல்வார் என்பதில் சந்தேகமில்லை!