நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து விடுவார்.. தங்க.தமிழ்ச்செல்வனின் 'வார்னிங்' ஆடியோ
Recommended Video
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறி தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தினகரன் அணி மற்றும் அமமுக கட்சியிலிருந்து தங்க.தமிழ்ச்செல்வன் வெளியேறி விட்டதாக சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அமமுகவில் இருந்து விலகி தாய் கழகமான அதிமுகவிற்கு செல்லவும், தங்க.தமிழ்ச்செல்வன் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தினகரனின் உதவியாளரிடம், தங்க.தமிழ்ச்செல்வன் போனில் பேசுவதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், தினகரன் கோழைத்தனமான அரசியலில் ஈடுபட்டு வருவதாக, தங்க.தமிழ்ச்செல்வன் மிகவும் காட்டமாக பேசுவதாக இடம்பெற்றுள்ளது.
கோழைத்தனமான அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டால், தினகரன் அழிந்து தான் போவார் என்றும் நான் விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிந்து போய் விடுவார் என்றும் தங்க.தமிழ்ச்செல்வன் மிரட்டும் தொனியில் பேசியுள்ளதாகவும் ஆடியோவில் பதிவாகி உள்ளது.
ஜெயலலிதா மறைந்தது முதலே சசிகலா மற்றும் டிடிவி தரப்புடனே தூணாக துணை நின்றவர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியுற்ற தினகரன் ஒருகட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கினார் இந்த கட்சி இரட்டை இலை சின்னத்தை மீட்கவே என கூறப்பட்டது
இந்நிலையில் சமீப காலமாக டிடிவி மற்றும் தங்க.தமிழ்ச்செல்வன் இடையே கடும் மோதல் நிலவி வருவதாக தகவல் வௌியானது அமமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில் தங்க.தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தல்களில் பலத்த அடி வாங்கியது அமமுக
இதனையடுத்து தினகரன் - தங்க.தமிழ்ச்செல்வன் இடையிலான விரிசல் அதிகமானதாக கூறப்பட்டு வந்தது சமீபத்தில் பேட்டி ஒன்றின் போது பேசிய தங்க.தமிழ்ச்செல்வன் தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்
அதே போல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்து தள்ளும் தங்க.தமிழ்ச்செல்வன், அந்த பேட்டியில் பிளாஸ்டிக்கை ஒழித்த அதிமுக அரசின் நடவடிக்கை வரவேற்கதக்கது என்றும் கூறியிருந்தார்
இதனால் விரைவில் தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளார் என செய்திகள் இறக்கை கட்டி பறந்த நிலையில் தற்போது தினகரனை கோழைத்தனமான அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் தாக்கி பேசியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.