சண்டை தொடருமா? சமரசமா? என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை
சென்னை: இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசும், நாட்டின் உயரிய அதிகாரம் படைத்த ஆர்.பி.ஐ வங்கியும் வெளிப்படையாக மோதிக்கொண்ட விவகாரம் சாமானியர்கள் வரை பேசப்படுகிறது. இரு அமைப்புகளுக்கு இடையேயான சண்டை அப்பட்டமாக வெளியே வர யார் காரணம்? நிச்சயம் ஆர்.பி.ஐ மூத்த அதிகாரிகள்தான். ரகசியத்திற்கு பெயர்போன ஆர்.பி.ஐயிலிருந்து எப்படி இந்த சண்டை விவகாரம் கசிந்தது?
ஆர்.பி.ஐயின் மூத்த அதிகாரி ஒருவர் முன்னணி நாளிதழ் செய்தி ஆசிரியரை அழைத்து மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுதான், இந்த சண்டை அம்பலமானதற்கு முதல்படி. தகவல் பரவ, ஆளாளுக்கு இருக்கிற சோர்ஸ்களை தூசிதட்டி எடுக்க முழு சண்டையும் ஏடுகளில் அச்சேர காரணமாகிவிட்டது. ஆர்பிஐ உடனான சண்டையை மத்திய அரசு விரும்பவில்லை என்றாலும், இதை வெளியில் சொன்னதையும் ரசிக்கவில்லை. ஏனென்றால் பிரதமர் பெயர் கெட்டுவிடும் என்பதுதான் காரணம்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய திட்டங்களால் என்ன நடந்தது என்பதை ஆர்.பி.ஐக்கு நன்கு தெரியும். பண மதிப்பிழப்பு அறிவிப்பால் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்ற மத்தியரசின் வார்த்தை ஜாலம் எடுபடவில்லை என்பதை ஆர்.பி.ஐயின் அறிக்கைகள் வெளிச்சம்போட்டுவிட்டது. அதேபோல், ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் மாற்றங்களை செய்வதால் இன்னும் சிக்கல் குறையும் என ஆர்.பி.ஐ கருத்துச் சொல்லிவருகிறது.
[என்னென்னோ பண்ணி பார்த்தாச்சு.. வாயே திறக்காத கொள்ளையர்கள்.. வெறுப்பில் சேலம் போலீஸார்! ]
கட்டுப்படுத்தும் மத்திய அரசு
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்திக்க என்ன காரணம் என்பதையும் ஆர்.பி.ஐ அறிந்துவைத்திருக்கிறது. இதையும் மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால், ஆர்.பி.ஐ இப்படித்தான் செயல்படவேண்டும், இப்படித்தான் அறிக்கை கொடுக்கவேண்டும் என மத்திய அரசு நிர்பந்திக்க முடியுமா? முடியவே முடியாது.
ஆர்பிஐ முடிவில் தலையீடு
ஏனென்றால், ஆர்.பி.ஐ முழுக்க முழுக்க தன்னாட்சி அமைப்பு. ஆனால், ஆட்சியாளர்கள் சொல்வது, தொடர்ந்து எதிர்மறை தகவலை வெளியிட்டால், அந்நிய முதலீடுகள் இந்திய சந்தையை விட்டு வெளியேறிவிடும். முதலீட்டாளர்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது என கவலைப்படுகிறது என்கிறார் மூத்த நிதித்துறை அதிகாரி ஒருவர். பிரதமர் நேரடியாக தலையிட்டும் பிரச்னை தீரவில்லை. ஆனால் மாறாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது. ஏனென்றால், ஆர்.பி.ஐ நடவடிக்கையில் யாரும் தலையிடமுடியாது.
நாணயக்கொள்கை குழு அமைத்ததில் அதிருப்தி
நாணயக் கொள்கை, பண வீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் ஆகியவை ஆர்.பி.ஐயின் முக்கியப்பணிகள். ஆனால், 2016 ஆம் ஆண்டு நாணயக்கொள்கையை முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டது. இதை ஆர்.பி.ஐயில் யாரும் விரும்பவில்லை. 6 பேர் கொண்ட குழுவில், ஆர்.பி.ஐ சார்பில் 3 பேர், மத்திய அரசின் சார்பில் 3 பேர் உள்ளனர். பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதால், வட்டிவிகிதத்தை குறைக்க மத்தியரசு நினைக்கிறது. ஆனால், அதை ஆர்.பி.ஐதான் செய்யமுடியும்.
கண்காணிப்பது யார்?
மேலும், பேடிஎம், கூகுள்பே, போன்பே போன்ற செயலிகளை யார் கண்காணிப்பது, முறைப்படுத்துவது என்பதிலும் மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐக்கும் மோதல் தொடர்கிறது. இதனால், இந்த சண்டை இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. தீபாவளியை ஒட்டி இப்போதைக்கு பிரேக் எடுத்துள்ள இந்த விவகாரம் நிச்சயம் பண்டிகைக்குப்பிறகு விஸ்பரூபம் எடுக்கும் என்கிறார்கள் ஆர்.பி.ஐ வங்கி பணியாளர்கள்.