உடன் பிறந்த தம்பியை கொடூரமாக சுட்டுக் கொன்ற தூத்துக்குடி பில்லா ஜெகன்.. திமுகவிலிருந்து சஸ்பெண்ட்
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்த பில்லா ஜெகன், விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கிறார். லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனிடம், தம்பி சிம்சன் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். குடும்ப விவகாரத்திலும் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறக்க தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தம்பி சிம்சன் தொடையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ரத்தம் அதிகமாக வெளியேறியது. நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் சிம்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கியால் சுட்ட பில்லா ஜெகன், தப்பியோடி திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்தார். அவரை திருவனந்தபுரம் சென்று கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்.. கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம்
கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க விதிகளை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். திமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகை நயன்தாராவை தரக்குறைவாக பேசியதாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் கூறி, தி.மு.க., விலிருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.