கனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா
சென்னை: தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கீதா ஜீவன், தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. 6,472 பேருக்கு பாதிப்பு உறுதி
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்பியுடன் பல்வேறு மக்கள் நல பணிகளில் இணைந்து செயல்பட்டவர் கீதா ஜீவன். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தின்போது சாத்தான்குளத்திலேயே முகாமிட்டு கனிமொழியுடன், பணியாற்றியவர் கீதா ஜீவன் என்பது குறிப்பிடத்தக்கது.