இந்தி கற்பிக்கும் பள்ளிகள் எதையும் திமுக நடத்தவில்லை... கனிமொழி எம்.பி பதிலடி
சென்னை: திமுக எந்த பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விளக்கமளித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி , சென்னை ராயப்பேட்டையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி கற்பிக்கும் பள்ளிகள் எதையும் திமுக நடத்தவில்லை என்றும், அப்படி பள்ளிகள் நடத்தினால் இருமொழி கொள்கை மட்டுமே இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், குடிநீர் பிரச்சனையைக் கூட தீர்க்க கூட முடியாத ஆட்சியாக தற்போதைய ஆட்சி இருக்கிறது எனவும் மாநில அரசை திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிச்சயமாக திமுக எம்பிக்கள் குரல் எழுப்புவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளதாக எம்.பி கனிமொழி கூறினார். மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டதை நடத்த திமுகவினர் தயாராக உள்ளனர் என்றும், நாடே ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகம் வேறு பக்கம் செல்லும் என்பதை உணர்த்தும் வகையில், நடந்து முடிந்த தேர்தலில் பாடம் புகட்டியுள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.
இந்தநிலையில், இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை என்பதை முதலமைச்சர் விளக்கமாக கூறி இருக்கிறார். மும்மொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கனிமொழி பேசியுள்ளார்.