ஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன? களத் தகவல் இதுதான்
Recommended Video
தூத்துக்குடி: பெரும்பாலானோர் நினைப்பதை போல, தூத்துக்குடியில் கனிமொழி பெற்றுள்ள இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இருந்த மக்களின் கோப மனப்பாங்கு மட்டும் கிடையாது.
கனிமொழி வெற்றியின், பின்னணியில், ஸ்டெர்லைட் விவகாரம் உட்பட, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து பார்க்கலாம் வாருங்கள்:
இந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது. இதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியும், ராஜ்யசபா எம்பியுமான, கனிமொழி மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இரு பெண் தலைவர்கள் நேரடியாக மோதிய களம் தூத்துக்குடி.
இரு வெவ்வேறு சித்தாந்தங்களை சேர்ந்த கட்சிகளின் முக்கியமான பெண் தலைவர்கள் மோதிக்கொண்ட தூத்துக்குடி களம் இந்தியா முழுமைக்கும் கவனத்தை இழுத்தது. ஆனால் இறுதியில் திராவிட சித்தாந்தத்தின் வார்ப்பு, கனிமொழி, 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்!
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் விவகாரம் என்பது தூத்துக்குடியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. என்னதான் இருந்தாலும் 13 பேரை குருவியை சுடுவது போல சுட்டுக் கொன்ற, சமகால வரலாற்றின் ஜாலியன்வாலாபாக் தூத்துக்குடியில், எந்த தைரியத்தில் தமிழிசை போட்டியிடுகிறார் என்ற கேள்வி முதலிலேயே, எழுந்தது. ஆனாலும், களநிலவரம் அறியாமல் களமிறங்கவில்லை தமிழிசை. அவரைப் பொறுத்தளவில் வேறு வியூகம் வைத்திருந்தார்.
தமிழிசை வியூகம்
ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் தேவை என்று, ஒரு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்தனர். சுமார் 15 கிராம மக்கள், இக்கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளித்ததை கூட சமீபத்தில் நாம் பார்த்தோம். இது போன்ற வாக்காளர்கள்தான் தமிழிசையின் இலக்கு. ஒரு வகையில் இப்படித்தான் அவருக்கு 2 லட்சத்திற்கும் அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதுதவிர தமிழிசை சார்ந்த சமுதாயத்தின் ஓட்டுக்கள் பெருமளவில் தூத்துக்குடி தொகுதியில் உள்ளன. இதுவும் தனக்கு கைகொடுக்கும் என்று நினைத்தார் தமிழிசை.
இறங்கியடித்த திமுக
மற்றொரு பக்கம், கனிமொழிக்கும் அதே போன்ற பிரச்சாரம் திமுகவினரால் முன்னெடுக்கப்பட்டது. "அவரும் உங்க ஆளுதாங்க.." என்று வாக்காளர்களின் காதுகளில் திமுக கள நிர்வாகிகள் கிசுகிசுத்தனராம். லோக்கல் வாட்ஸ்அப் க்ரூப்களிலும் திமுக உள்ளூர் பிரமுகர்கள் இந்த அஸ்திரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் செய்துள்ளனர். கனிமொழியே கூட, தனது ட்விட்டர் கணக்கில், முகப்பு படமாக பனைமரத்தை மாற்றி வைத்துக் கொண்டார். தூத்துக்குடி, பனைமரங்களின் தேசம் என்று அவர் காரணம் கூறினாலும், பொதுவெளியில் இருப்போருக்கு அது வேறு தகவலை சொல்லியதை மறுக்க முடியாது.
இப்படியாக, ஜாதி தந்திரத்திற்கும் செக் வைத்தார் கனிமொழி.
உள்ளூர் பிரபலங்கள்
திமுக களத்திலும், மிக வலுவான கட்டமைப்பை பெற்றிருந்தது. பாஜகவுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் பெரிய கட்டமைப்பு கிடையாது. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் போன்ற அந்த மாவட்டத்தின் திமுக செயலாளர்கள்&எம்எல்ஏக்கள், கனிமொழிக்கு இரவு பகல் பார்க்காமல் தேர்தல் பணியாற்றினர். அப்படியான உள்ளூர் பிரபல முகங்கள் தமிழிசை பக்கத்தில் இல்லை. பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருந்தது. ஏற்கனவே பண்ணையார் மற்றும் ஜான் பாண்டியன் குரூப்கள் நடுவே நீண்டகாலமாக பெரும் மோதல், கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, பாஜகவுக்கு வாக்களிக்க தமிழிசை, சார்ந்த சமுதாய மக்களே தயங்கியதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றவாதி
கனிமொழி ஏற்கனவே இருமுறை ராஜ்யசபா எம்பியாக அனுபவம் வாய்ந்தவர். ஸ்டாலின் வாழ்த்து சொன்னதை போல, ராஜ்யசபாவில் அவர் ஒரு நாடாளுமன்ற புலி போல செயல்பட்டார். பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் மசோதாவுக்கு எதிராக, அவர் நாடாளுமன்றத்தில் எந்த அளவுக்கு வீரியமாக பணியாற்றினார் என்பது நாடே பார்த்தது. ஆனால் தமிழிசை நாடாளுமன்றவாதி கிடையாது. இதையும் கண்டிப்பாக தூத்துக்குடி மக்கள் சீர்தூக்கி பார்த்துள்ளனர். தங்களது பிரச்சனைகளுக்காக யார், நாடாளுமன்றத்தில் சிறப்பாக குரல் எழுப்புவார்களோ, அவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது என்பதுதான் மக்கள் விருப்பமாக இருக்கும்.
சிறுபான்மையினர் ஓட்டுக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கிறிஸ்தவர்களை கணிசமாக கொண்ட மாவட்டம். வேறு எந்த மாவட்டத்தோடு ஒப்பிட்டாலும், தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக கிறிஸ்தவர்கள் உண்டு. முஸ்லீம் வாக்காளர்களை பெருவாரியாக கொண்ட, காயல்பட்டினம், கலைஞர்பட்டினம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட கூடியது. கூடியது. அந்த அளவுக்கு காயல்பட்டினம் வாக்காளர்கள் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மத சிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க அச்சப்படுவதும் திமுகவுக்கு மற்றொரு பலம்.
பெண்கள் ஓட்டு
இது தவிர கனிமொழி தங்கியிருந்த தூத்துக்குடி இல்லத்தில் நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனைகள் உள்ளிட்டவையும் அவர் மீது பெண்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வருடமாகவே, தூத்துக்குடி மாவட்டம் முழுக்க தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து கிராம புறங்களில் அவர் தொடர்ந்து பெண்களை சந்தித்து வந்ததும் கை மேல் பலன் கொடுத்துள்ளது. இதுபோன்ற காரணங்கள்தான், கனிமொழியின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் என்கிறார்கள் களம் அறிந்தவர்கள்.