தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில், நேற்று விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது ஊடகங்களின் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம்.
இந்த நிலையில், திருவாரூரில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள், திமுகவின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கும் அதிமுக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, பேரணியில் ஈடுபட்டவர்களெல்லாம் பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து, அவர்களை நடு இரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்ய காவல்துறை முயன்றுள்ளது. காவல்துறையின் இந்த அராஜக போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
டெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா
மேலும், நானும் விவசாயி, விவசாயிகளின் நண்பன் என ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியின், உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
பாசிச மோடி அரசின் அடிமையாக இருந்து வரும் எடப்பாடி அரசுக்கு, இந்நேரத்தில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். அதாவது, பல்வேறு நிலைகளில், காலக்கட்டங்களில் அதிமுக அரசின் உண்மை முகத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர்.
எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுக்கும், போலி விவசாயான எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.