மனுதர்மத்துக்கு எதிரான விசிக போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்- வேல்முருகன், சீமான்
சென்னை: மனுதர்மத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் நடத்தும் போராட்டம் வெற்றி வாழ்த்துகள் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சனாதன தர்மத்தை தாங்கிப்பிடிக்கும் மனுதர்மமானது பெண்களை எவ்வாறு இழிவாக குறிப்பிடுகிறது என்று மனுதர்மத்தை மேற்கோளிட்டு ஆற்றிய ஒரு நீண்ட உரையை முன்னும் பின்னுமாக வெட்டிவிட்டு அவரை இந்துப் பெண்களுக்கு எதிரானவராக சித்தரிக்க முயலும் பிஜேபியினரும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் போக்கை கைவிட்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான அவரை மிகவும் தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சிப்பதையும் அவருக்கு எதிரான பொய் பரப்புரையில் ஈடுபடுவதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான மனுதர்மம்
மனுதர்மம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எதிரானது என்பதிலும் அது அகற்றப்பட வேண்டும் என்பதிலும் நாங்களும் உடன்படுகிறோம்.
விசிக போராட்டம் - வாழ்த்துகள்
உழைக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சனாதானத்துக்கு எதிராக மனுதர்மத்துக்கு எதிராக அம்மக்களை ஒன்று திரட்டி விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் நாளை (24 -10 -2020) நடைபெறும் போராட்டம் வெற்றியடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
தனிமனித தாக்குதல் கண்டனம்
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு ஏற்ப, மனிதர்களை மனிதர்களாய் பாராது வருணப்பேதத்தின் மூலம் பிரித்தாண்டு; ஒடுக்கித் தாழ்த்தி வீழ்த்தத் துடிக்கும், பெண்களை இழித்துரைக்கும் மனுதர்மத்தின் கொடியக் கோட்பாடுகளை எடுத்துரைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத்தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
போராட்டத்துக்கு வாழ்த்துகள்
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று அவதூறுப்பரப்பரையில் ஈடுபடும் அக்கயவர்களின் கொடுஞ்செயல் துணிவற்ற கோழைத்தனமாகும். மனுதர்மத்தின் கோர முகத்தைத் தோலுரித்து நாளை (24.10.2020) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுக்கவிருக்கும் அறப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.