மருத்துவ கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த மாணவிகளுடன் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேல்முருகன்
சென்னை: கல்வி கட்டணத்தால் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்த கடலூர் மாணவிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன் இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டிய வாய்ப்புக் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், அந்த வாய்ப்பினை நிராகரிக்க நேர்ந்த, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து தங்களது குறைகளைக் கூறினர். அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உடனிருந்தார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் இதேபோன்ற காரணத்தால் பாதிக்கப்பட்டதாக இன்றைய நாளிதழ்களில் வெளியான மாணவர்கள் குறித்தும் குறிப்பிட்டு, அவர்கள் உடனடியாக மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றினை ஸ்டாலின் எழுதினார்.
மாணவிகள் நிலை
இந்த கடிதத்தை, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்: 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம்பெற்ற மாணவ மாணவியர் பலருக்கு, கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது என்பதால், தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள்
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.சுபத்ரா, திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த மாணவர் அருண்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.தங்கபாண்டி, மற்றொரு மாணவி தங்கப்பேச்சி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத பொருளாதார நிலைமைக்கு உள்ளாகியிருக்கும் காரணத்தால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து, அரசு மருத்துவக் கல்லூரியின் இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக, இன்றைய "தி இந்து" ஆங்கிலப் பத்திரிகையில், 6-ஆம் பக்கத்தில், விரிவான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் 2 மாணவிகள்
இதேபோல், கடலூர் மாவட்டத்தில் சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியா, கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஆகியோரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. "நீட்" தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக, Post Matric கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தச் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக" அரசு சார்பில் காலதாமதமாக அறிவித்ததும், இந்த மாணவ மாணவிகளுக்குக் கலந்தாய்வின்போதே முக்கியமான இந்தத் தகவலைத் தெரிவிக்காததும், நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
மறு கலந்தாய்வு
கலந்தாய்வின்போதோ அல்லது அதற்கு முன்னரோ, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இந்தத் தகவலைக் கூறாததால் - இன்றைக்குப் பல மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு, "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை" என்றாகி விட்டது. இதற்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆகவே கல்விக் கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் தங்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்த மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ஆக்கபூர்வமாக உதவிடும் வகையில், மீண்டும் கலந்தாய்வு நடத்தி, அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு உரிய தேவையான நடவடிக்கையைத் தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் எழுதியுள்ளார்.