17 பேரை பலி கொண்ட தடுப்புச் சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனை கைது செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்
Recommended Video
சென்னை: மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்ட தடுப்புச் சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியை ஒட்டி, சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களா உள்ளது. பங்களாவை ஒட்டி ஒரு புறமாக மட்டும் 80 அடி நீளத்தில் 10 அடிக்கும் அதிகமான உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளார் அவர்.
அந்தச் சுவரை ஒட்டிய தாழ்வான பகுதியில் நான்கு வீடுகள் இருந்தன. தடுப்பு சுவர் அந்த வீடுகள் மேல் எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதை அந்த 4 வீட்டார்களும் சிவசுப்பிரமணியனிடமும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் புகார் கூறிவந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்டது 20 அடி உயர தீண்டாமை சுவர்: மு.க.ஸ்டாலின்
சுவர் இடிந்து 17 பேர் பலி
இந்நிலையில் மழை பெய்து தண்ணீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டதால் அந்தச் சுவர் இடிந்து விழுந்து அந்த 4 வீடுகளையும் தரைமட்டமாக்கியது. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து கட்சி போராட்டம்
பலியானவர்களின் உறவினர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். சிவசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், திமுக மற்றும் காங்கிரஸ்காரர்களும் பங்கேற்றனர். தமிழ்ப்புலிகள் கட்சியினரும் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
தீவிரமான தடியடி
போராட்டத்தை கலைக்க போலீசார் தீவிரமாக தடியடி நடத்தினர். நாகை திருவள்ளுவனை மிருகத்தனமாக, படுபயங்கரமாகத் தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற போலீசார் அவரோடு ஏராளமானோரை கைது செய்து காவல் துறை வாகனத்திற்குள் திணித்துக் கொண்டுபோயினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிவசுப்பிரமணியன் மீது வழக்கு
சிவசுப்பிரமணியன் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார். அதேநேரம் நாகை திருவள்ளுவன் மீது போலீசார் என்ற போர்வையில் சமூக விரோதிகள் தாக்கினர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும், அவர் மீதான தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.
ரூ50 லட்சம் உதவித் தொகை
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதோடு, சுவருக்கு உரிமையாளரை விட்டுவிட்டு, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையே கைது செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையை கண்டிக்கிறோம். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.