தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேல்முருகன் வேண்டுகோள்
சென்னை: தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035ஆவது பிறந்த நாள் சதய விழாவை வரும் 26.10.2020 திங்கட்கிழமை ஒருநாள் நிகழ்வாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
அப்போது வழக்கமாக நடைபெறும் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை கொரோனாவை முன்னிட்டு இவ்வாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது சரிதான். இவ்விழாவில், மூலவரான பெருவுடையார் கருவறையிலும் மற்ற தெய்வ பீடங்களின் கருவறைகளிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே தமிழ் மாமன்னனுக்குச் செலுத்தும் நேர்மையான நன்றிக் கடனாகும். சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
சூப்பர்.. தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள்.. அசத்திய எடப்பாடி.. 8000 பேருக்கு வேலை
அர்ச்சனை விதிகளுக்குட்பட்டது
தேவாரம், திருமந்திரம் முதலான கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்திகள் நிறைய பேர் உள்ளார்கள். மேலும், தமிழில் பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறைக் கோவில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதேயாகும்.
தமிழ், சமஸ்கிருதத்தில் அர்ச்சனை
ஆனால் கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணையிடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில், 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணைப்படியே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்தப்பட்டது.
சமஸ்கிருதத்தில் ஏற்க முடியாது
ஆனால், இல்லாத மொழியான சமஸ்கிருதத்தில் அர்ச்சனை, அதுவும் தமிழ் மட்டுமே தெரிந்த, தமிழர்கள் கட்டிய கோவில்களில் என்பது, வலிந்து திணிக்கப்பட்ட கொடிய நச்சுச் செயல் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். உணர்ந்து அறிவுக்கேடான, நியாயப்படுத்தவே முடியாத, உள்ளதிலேயே தவறான அந்தக் குற்றப் பழக்கவழக்கத்தினைக் கைவிட வேண்டும். இதை ஒரு கொள்கை முடிவாகவே தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். எனவே தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவில் பெருவுடையார் கருவறை உள்பட மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களை மாத்திரம் சொல்லியே பூசை செய்ய ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
தில்லை ஓதுவார் ஆறுமுகசாமி
நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது 2008 ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை தடுத்ததைக் கண்டித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து ஓதுவார் ஆறுமுகசாமி அவர்களை தமிழில் அர்ச்சனை செய்யவும் தேவாரம் திருவாசகம் பாடவும் அனுமதி பெற்று தந்தேன். தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் தமிழிலேயே பூசை-அரச்சனை செய்ய தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அரசு நினைத்தால் ஓர் அரசானையின் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும்,
தமிழில் மட்டும் பூசை
இது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தல் மட்டுமல்ல; பாஜக தவிர்த்து, பிற கட்சிகள் மற்றும் தமிழ் மட்டுமே தெரிந்த பொதுமக்கள் அனைவரின் வலியுறுத்தலுமாகும். தமிழில் மந்திரம்-பூசை என்பது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கோயில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாகையால், தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கத் தடையில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, 26.10.2020 தேதிய தஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் மட்டுமல்ல, ஏனைய கோவில்களிலும் தமிழிலேயே பூசை செய்யக் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.