பொய்யான தகவலை சொல்லி பேசிய ரஜினிகாந்த்.. வீடியோவை நீக்கி டுவிட்டர் அதிரடி
சென்னை: தப்பான தகவலை பரப்பியதாக, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட வீடியோவை ட்விட்டர் இணையதளம் அதிரடியாக நீக்கியுள்ளது.
Recommended Video
நாளை மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார்.
அதில் மோடியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தால் கூட பரவாயில்லை.. 14 மணி நேரம் வைரஸ் பரவுவதைத் தடுத்து விட்டால் அதற்கு பிறகு அது பரவாது என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். இது வழக்கமாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஒரு பொய்யான தகவல். இதை ரஜினிகாந்த் எப்படி சொல்லலாம்? அப்படிப்பார்த்தால் சீனா போன்ற நாடுகளில் நீண்ட காலமாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருந்தனரே எதற்காக என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.
இதுதொடர்பாக ட்விட்டர் இணைய தளத்திற்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இது உலகளாவிய, முக்கிய, பிரச்சினை என்பதால் தவறான தகவல் பரப்புவதை தடுப்பதற்காக ரஜினிகாந்த் வீடியோவை டுவிட்டர் இணையதளம் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. அதில், இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் விதிமுறைகளை மீறியதால் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் போன்ற சுமார் 6 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக எந்த அளவுக்கு சர்வதேச சமூகம் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ரஜினிகாந்த் தனது வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு அதை ட்விட்டரில் ஷேர் செய்து வைத்துள்ளார். மேலும் தான் சொல்ல விரும்பியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்.